எக்ஸ்ட்ரா 100 கோடி : இன்னும் பிரம்மாண்டமாகும் ‘2.0’

பிரம்மாண்டம் என்கிற வார்த்தையைக் கேட்டாலே சட்டென்று ஞாபகத்துக்கு வரும் பெயர் இயக்குநர் ஷங்கர்.
இயக்குகிற எல்லாப் படங்களும் அதிக பொருட்செலவில் எடுப்பவர் என்கிற பெயரைப் பெற்ற ஷங்கரின் ஒவ்வொரு படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிற எதிர்பார்ப்பும் இம்மியளவும் குறையாது.
அந்த வகையில் ‘ஐ’ படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘2.0’ படத்தை இயக்கி வருகிறார்.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்துக்கு அதிக பணம் தேவைப்பட்டதால் ஷங்கரை நம்பி கோடிக்கணக்கில் வாரி இறைக்க முன் வந்தது லைகா புரொடக்ஷன்ஸ்.
எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிற நிறுவனமாக இருந்தாலும் ஒவ்வொரு படத்துக்கும் ஒரு லிமிட் வைத்துதான் பட்ஜெட்டை ஒதுக்கிறது லைகா.
அப்படித்தான் 2.0 படத்துக்கு ஷங்கர் கொடுத்த பட்ஜெட்டான 300 கோடியை ஒதுக்கியது. இதில் ரஜினியின் சம்பளமும் அடக்கம்.
அவ்வப்போது ரஜினிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவையும் மீறி ஒரு வழியாக படப்பிடிப்பெல்லாம் முடிந்து படத்தின் பர்ஸ்ட் லுக் விழாவும் 6 கோடி செலவில் சமீபத்தில் மும்பையில் நடந்தது.
தற்போது தொழில்நுட்ப வேலைகள் நடந்து வருகிறது. இதில் படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட வேலைகளுக்கு முதலில் சொன்ன பட்ஜெட்டை கூட கூடுதலாக 100 கோடி ரூபாய் ஆகும் என்று தெரிவித்திருக்கிறார் ஷங்கர்.
ஏற்கனவே படத்துக்கு 300 கோடி பட்ஜெட்டை ஒதுக்கிய லைகா ஷங்கர் மீதுள்ள நம்பிக்கையில் அவர் கேட்ட 100 கோடி தர ஒப்புக்கொண்டிருக்கிறது லைகா.
ஹாலிவுட்டுக்கு சவால் விடும் வகையில் 2.0 படம் இருக்கும் என்று பர்ஸ்ட் லுக் விழாவில் சொல்லியிருந்தார் ரஜினி. அதை நிரூபிக்கும் வகையில் படத்துக்கான தொழில்நுட்ப வேலைகளில் மும்முரம் காட்டி காட்சிகளை மெருகேற்றி வருகிறார் இயக்குநர் ஷங்கர்.
வெக்கிற அகலக்கால் பணத்தை அள்ளிக்கிட்டு வரட்டும்!