எனக்கு 20 உனக்கு 20 : சம்பளம் வாங்குவதில் சாதனை படைத்த ஏ.ஆர்.முருகதாஸ்!
‘கத்தி’ படத்துக்குப் பிறகு விஜய் நடித்த ‘தெறி’ படம் கூட ரிலீசாகி விட்டது. ஆனால் ‘கத்தி’யை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் பற்றி தகவல் தான் முன்னுக்குப் பின் முரணாக வந்து கொண்டிருந்தது.
ஒரு வழியாக எல்லா புரளிகளையும் தாண்டி தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்கும் வேலையில் இருக்கிறார் என்கிற உறுதியான தகவல் சில மாதங்களுக்கு முன்பு வந்த நிலையில் தற்போது அந்தப் படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் சூடு பிடித்திருக்கிறது.
ஏற்கனவே படத்தின் பட்ஜெட்டுக்கு ஒரு பெருந்தொகையை ஒதுக்க சம்மதித்த படத்தின் தயாரிப்பாளர் அடுத்து இயக்குநருக்கும், ஹீரோவுக்குமான சம்பள விஷயத்திலும் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார்.
ஆமாம், ஹீரோ மகேஷ்பாபுவுக்கும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் தலா 20 கோடி ரூபாயை சம்பளமாக கொடுத்திருக்கிறாராம் தயாரிப்பாளர்.
மகேஷ்பாபுவின் படங்களுக்கு தெலுங்கில் 80 கோடி வரை வியாபாரம் இருக்கிறது. அதேபோல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் தமிழ், ஹிந்தி இரண்டிலும் 150 கோடி ரூபாய் வரை பிசினஸ் இருக்கிறது. இந்த இரண்டையும் கூட்டிக் கழித்துப் பார்த்து தான் மேற்படி சம்பளத்தை தர ஒப்புக் கொண்டாராம் தயாரிப்பாளர்.
தமிழிலிருந்து மற்ற மொழிகளுக்கு படம் இயக்கப்போன இயக்குநர்களில் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கி சாதனை படைத்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவர இருக்கும் இந்தப்படம் சமூகத்துக்கு ஒரு நல்ல செய்தி சொல்லக்கூடிய கமர்ஷியல் படமாக இருக்குமாம்.
வருகிற ஜூலை இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கும் இப்படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை பரிநிதி சோப்ரா கதாநாயகியாக நடிக்கிறார்.