ஆடை அணிவது தனிப்பட்ட உரிமை- சமந்தா
கடந்த சில மாதங்களாக நடிகை சமந்தா தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 96 படத்தின் ரிமேக் ஆன ஜானு பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதை வைத்தே சில ரசிகர்கள் அவரை கலாய்த்து வந்தார்கள். மேலும் அவர் அணியும் ஆடைகள் பற்றியும் கிண்டலும் விமர்சனங்களும் வருகின்றன. இதுகுறித்து பேசிய சமந்தா,
“என் போன்ற ஹீரோயின்களுக்குக் கூட ஆடை குறித்த அச்சம் அதிகமாக இருக்கிறது. அதிலும் திருமணம் முடிந்த பின்னர் எனது ஆடைகுறித்து என்னை அதிகமாக விமர்சித்தார்கள். அது என்னை கடுமையாக பாதித்தது. அந்த நிகழ்ச்சி, நான் திருமணம் செய்து கொண்ட புதிதில் நடந்தது. ஆனாலும் நான் அடுத்த நிகழ்ச்சிக்கும் அதே போன்ற உடையில் தான் சென்றேன். அப்பொழுது விமர்சனங்கள் சற்று குறைந்திருந்தன. அப்பொழுது தான் நான் உணர்ந்தேன் ஆடை குறித்த விசயத்தில் மக்களை பழக்கப்படுத்த வேண்டியிருக்கிறது என்று.
மாடர்ன் உடைகள் அணிவது என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை. அதில் ஏன் பிறர் மூக்கை நுழைக்கிறார்கள் என்று தெரியவில்லை. அது குறித்தெல்லாம் கவலைப்படவோ பயப்படவோ வேண்டாம் என்பது தான் நான் என் அனுபத்தில் தெரிந்து கொண்டது. மேலும் திருமணம் ஆனப் பின்னர் இப்படித்தான் ஆடை அணிய வேண்டுமென்கின்ற கோட்பாடுகளை தூக்கி எறிய வேண்டும்” என்று பேசியுள்ளார்.