”நாங்கள் ஒற்றுமையாகத் தான் இருக்கிறோம்” – நடிகர் சங்கத் தலைவர் நாசர்

Get real time updates directly on you device, subscribe now.

ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட முடிவு செய்த ஆரம்பித்ததிலிருந்தே அவரின் அந்த முடிவுக்கு திரையுலகில் கடும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்ப ஆரம்பித்து விட்டன.

முதலில் அந்த எதிர்ப்பை இயக்குனர் சேரன் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்புப் போராட்டமாக ஆரம்பித்து வைக்க, இன்றுவரை அந்த எதிர்ப்பு மனநிலை சக தயாரிப்பாளர்கள் மத்தியில் குறைந்தபாடில்லை.

அதோடு விட்டதா என்றால் விஷால் செயலாளராக பதவி வகிக்கும் நடிகர் சங்கத்திலும் அவருக்கு எதிராக சிலர் எதிர்ப்புக் குரல்களை பதிவு செய்திருப்பதாக அரசல்,புரசலாக செய்திகள் பரவியது.

அது உண்மை தான் போல என்று நம்பும் விதத்தில் நடிகரும், நடிகர் சங்கத் துணைத் தலைவருமான பொன் வண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக இன்று அறிவித்து விஷாலுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்.

”சொந்தக் காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன்” என்று பொன்வண்ணன் சொன்னாலும், ஆர்.கே.நகர் இடைதேர்தலில் போட்டியிடுவதாக விஷால் அறிவித்தது பிடிக்காமல் தான் தனது துணைத் தலைவர் பதவியை பொன்வண்ணன் ராஜினாமா செய்ய முடிவெடுத்ததாக சொல்லப்பட்டது.

Related Posts
1 of 93

இந்நிலையில் அவரது ராஜினாமா குறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்தினர். இன்று 11.12.2017 நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் பொன் வண்ணனின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ”உப தலைவர் பொன்வண்ணன் அவர்கள் கொடுத்த ராஜினாமா கடிதம் பற்றி இந்த சிறப்பு செயற்குழுவில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

அவருடைய உணர்வுகளை மதிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில்லை என்று தீர்மானித்து அவருடைய பணி மேலும் தொடரும் வகையில் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள அவகாசமும் கொடுக்கிறது.

பொதுச்செயலாளர் விஷால் அவர்கள் தம்முடைய நிலைப்பாட்டை விளக்கியும் சங்கத்தின் சட்ட விதிகளுக்கு புறம்பாக எதையும் தான் செய்யவில்லை என்றும், இம்மாதிரி சங்கடங்கள் உருவாகும் சூழலை தான் உட்பட சங்கத்தில் எவரும் உண்டாக்க கூடாது என்றும் தெரிவித்தார்.

அதோடு நடிகர் சங்க நிர்வாகிகள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். நடிகர் கார்த்தியும் தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் என்று வந்த தகவலும் பொய் என்றும் தெரிவித்தார் நாசர்.