கர்நாடகாவுக்கு பயந்தால் என்னை வைத்து படமெடுக்க வேண்டாம்! : சத்யராஜ் அறிவிப்பு

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் காவேரி நதி நீர் பங்கீட்டு விஷயத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது,
அச்சம்பத்தில் உச்சக்கட்டமாக கர்நாடக மாநிலத்தில் பஸ் எரிப்பு சம்பவங்களும், தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளும் அடித்து நொறுக்கப்பட்டன, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதில் பேசிய அனைத்து திரைத்துரை கலைஞர்களுமே கோபத்தின் உட்சத்தில் பேசினார்கள். (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட), குறிப்பாக அதில் பங்கேற்ற புரட்சி தமிழன் என்று எல்லோராலும் அழைக்கப்படும் நடிகர் சத்யராஜ் தன்னுடைய தமிழ் உணர்வை தெரிவிக்கும் வகையிலும், நடந்த வன்முறை சம்பவங்களுக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் மிக அழுத்தமாக பேசியிருந்தார்.
அன்றே நடிகர் சத்யராஜின் உருவ பொம்மையை கர்நாடக மாநிலம் முழுவதும் கர்நாடக அமைப்புகளால் எரிக்கப்பட்டது, அதன் பின்னர் சமீபத்தில் ‘பாகுபலி’ இரண்டாம் பாகம் வெளியீடு நெருங்கும் நேரத்தில் வாட்டள் நாகராஜ் என்பவர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அவர் பேசிய பேச்சு கன்னட மக்களை புண்படுத்தும் வகையில் உள்ளது, ஆகையால் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாகுபலி 2’ திரைப்படத்தை கர்நாடகாவில் எங்கும் திரையிட விடமாட்டோம் என்று எதிர்ப்பு கிளப்பினார்.
இந்த நிலையில் நடிகர் சத்யராஜின் பேச்சுக்காக படத்தின் இயக்குநர் ராஜமெளலி மன்னிப்பு கோரி ஒரு வீடியோவை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார் அதில் அவர் நடிகர் சத்யராஜ் இப்படத்தின் இயக்குநரோ, தயாரிப்பாளரோ, கதாநாயகனோ அல்லது கதாசிரியரோ கிடையாது. அவர் ஒரு துணை நடிகர் தான், எதுவாக இருந்தாலும் படம் வெளியாவதை தடுக்காதீர்கள் என்று கன்னட மொழியிலேயே பேசி இருந்தார்.
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் தான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்ப்பு குழு தொடர்ந்து நிபந்தனைகளை கூறி அவ்வாறு நடைபெறவில்லை என்றால் நிச்சயம் படம் வெளியாகது என்று கூறியிருந்தனர்.
இதற்காக இன்றைக்கு நடிகர் சத்யராஜ் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் தான் பேசிய பேச்சுக்காக வருத்தம் தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியதாவது இந்த ஒன்பது ஆண்டுகளில் ‘பாகுபலி’ முதல் பாகம் உட்பட சுமார் 30 படங்கள் என் நடிப்பில் கர்நாடக மாநிலத்தில் வெளியாகியுள்ளது, அப்போதெல்லாம் நடக்காத ஆர்ப்பாட்டம் ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்திற்கு ஏன்? என்பது எனக்கு தெரியவில்லை,
இருப்பினும் என்னால் தயாரிப்பாளரோ, விநியோகிஸ்தரோ அல்லது இயக்குநரோ பாதிக்கப்படக்கூடாது என்பதால் மட்டுமே இந்த வருத்தத்தை நான் இப்போது ஒன்பது ஆண்டுகளுக்கு பின் தெரிவிக்கிறேன், கன்னட மக்களை நான் பெரிதும் மதிக்கிறேன். என்னுடைய உதவியாளர் கூட கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட ஒருவர் தான், இனி வரும் காலங்களில் தமிழ் ஈழப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, காவிரி நதிநீர் பிரச்சனையாக இருந்தாலும் சரி, விவசாயிகள் பிரச்சனையாக இருந்தாலும் சரி தமிழக மக்களின் நலன் சார்ந்த அனைத்து நியாயமாக பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு தான் இருப்பேன்.
இப்படி நான் கூறுவதால் இந்த சத்யராஜை வைத்து படமெடுத்தால் எதிர்காலத்தில் தொல்லைகள் வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள் தயவுசெய்து இந்த சாதாரண சின்ன நடிகனை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம். என்னால் நஷ்டமடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.ஏனென்றால் ஒரு நடிகனாக இருப்பதை விட, இறப்பதை விட எந்தவிதமான மூட நம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும் தான் எனக்குப் பெருமை, மகிழ்ச்சி.
எனது மனப்பூர்வமான வருத்தத்தை ஏற்றுக்கொண்டு ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட ஒத்துழைக்குமாறு கன்னட மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நான் மூட நம்பிக்கை அற்றவன் அதனால் நல்ல நடிகராக இருப்பதை விட, இறப்பதை விட ஒரு நல்ல தமிழனாய் இருப்பதிலும், இறப்பதிலும் தான் பெருமைக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.