வாய்ப்புகளை வளைக்கும் வடிவேலு! : வயிறு கலங்கும் காமெடியன்கள்
அரசியல் வலையில் சிக்கி சின்னாபின்னாமான வடிவேலு அதனாலேயே இரண்டு வருடங்களாக எந்தத் தமிழ்ப்படத்திலும் நடிக்கவில்லை. இல்லை இல்லை அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கூட வைத்துக் கொள்ளலாம்.
இதனால் காமெடி நடிகர்களுக்கு கடும் பஞ்சம் ஏற்பட, சந்தானம், சூரி ஆகியோர் இயக்குநர்களின் ‘காமெடி சாய்ஸ்’ ஆனார்கள். இவர்கள் தவிர்த்து யோகி பாபு, ரோபோ சங்கர் என வளர்ந்து வரும் காமெடியன்களும் தங்கள் பங்குக்கு படங்களை கமிட் செய்து காசு பார்த்து வந்தார்கள்.
இரண்டு வருடங்கள் ஓடி விட்டது. இனி வடிவேலு வரவே மாட்டார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ‘தெனாலி ராமன்’ படத்தில் ஹீரோவாக ரீ-எண்ட்ரி கொடுத்தார் வடிவேலு. அந்தப்படமும் அடுத்து வந்த ‘எலி’ படமும் எதிர்பார்த்த வெற்றியை வடிவேலுவுக்கு தரவில்லை. இதனால் தனது ஹீரோ ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்த வடிவேலு அடுத்து ஒரு அதிரடி முடிவை எடுத்தார்.
ஆமாம், அதுதான் பழையபடி மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடி கேரக்டரில் நடிப்பது என்கிற முடிவு.
அதன்படியே விஷால் நடிக்கும் ‘கத்திச்சண்டை’ படத்தில் காமெடி செய்து கொண்டிருக்கிறார் வடிவேலு. வடிவேலு மீண்டும் காமெடி கேரக்டரில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட இயக்குநர்களும் அவரை நோக்கி படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வடிவேலுவும் வருகிற வாய்ப்புகளை எல்லாம் பேரம் பேசி வளைத்துப் போடுகிறார்.
வடிவேலுவின் இந்த ரீ-எண்ட்ரி ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்திருந்தாலும் அவரது வருகை சக காமெடியன்கள் மத்தியில் வயிற்றை கலக்கி விட்டிருக்கிறது. எங்கே நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் ஒன்றிரெண்டு வாய்ப்புகள் பறி போய் விடுமே? என்கிற பயம் தான் அது.
இதனால் இதுவரை ”களத்துல நாங்க தாண்டி” எல்லாம் என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டிருந்தவர்கள் இப்போது அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.
‘புயல்’னாலே கொஞ்சம் பயம் தான்!