சிவகார்த்திகேயன் படத்துல சான்ஸ் கெடைச்சாச்சு! : மீண்டும் நடிக்க வந்தார் சினேகா
சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படம் ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டூடியோஸ் அடுத்த படத்துக்கான வேலைகளை தடபுடலாக ஆரம்பித்து விட்டார்கள்.
இயக்குனர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா இணைந்து நடிக்கும் இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.
ஏற்கனவே இதில் பாஹத் பாசில், ஆர் ஜே பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா என டஜன் கணக்கில் நட்சத்திரங்கள் குவிய இப்போது அந்தக் குவியலுக்குள் இன்னொரு நட்சத்திரமும் சேர்ந்திருக்கிறது. அவர் தான் ‘புன்னகை அரசி’ சினேகா.
நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சினேகா திருமணத்துக்குப் பிறகு நடிப்பில் கொஞ்சம் இடைவெளி விட்டிருந்தார். தனது கணவருடன் சேர்ந்து சில விளம்பரப்படங்களில் மட்டுமே அவ்வப்போது தலை காட்டி வந்தார். இப்போது ஒரு குழந்தைக்கு தாயாகி விட்ட நிலையில் மீண்டும் தனது மேக்கப் ஆசைக்கு கதவை முழுமையாக திறந்து விட்டிருக்கிறார் சினேகா.
ஆமாம், மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் மிக முக்கியமான கேரக்டர் மூலம் மீண்டும் கோலிவுட்டில் எண்ட்ரி போடுகிறாராம்
“என்னோட ரீ-எண்ட்ரி ரொம்ப பெரிய படமா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அது இந்தப்படத்துல அமைஞ்சிருக்கு. இந்தக் கேரக்டர் எனக்கு சேலஞ்சிங்கான கேரக்டர். கண்டிப்பா ரசிகர்களுக்கு என்னைப் பிடிக்கும் என்கிறார் அதே புன்னகை மாறாமல்!