அரசு மருத்துவமனை ஊழியர்களை இந்தளவிற்கு கீழிறக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்ப வைக்கும் படம் திருவின் குரல்
ஹீரோ அருள்நிதி கேட்கும் திறன் குறைவாகவும், பேசும் திறன் இல்லாமலும் உள்ள நடுத்தர குடும்பத்து இளைஞர். அப்பா பாரதிராஜாவோடு வாழ்ந்து வரும் அவருக்கு விரைவில் திருமணம். இந்நிலையில் பாரதிராஜா ஓர் விபத்தில் சிக்க, அவரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்கள். நான்கு சமூகவிரோதிகள் மருத்துவமனையில் சிறிய பொறுப்புகளில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கும் அருள்நிதிக்கும் ஒரு கட்டத்தில் உரசல் ஆகிறது. அதன்பின் நடக்கும் திக்திக் திருப்பங்கள் தான் படத்தின் கதை
அருள்நிதி நல்ல நடிகராக ஒருபடி உயர்ந்து நிற்கும் படம் இது. சிறப்பாக நடித்துள்ளார். ஹீரோயின் கொடுத்த வேலையை மட்டும் செய்துள்ளார். பாரதிராஜா வழக்கம் போல சில இடங்களில் இயல்பாகவும்,சில இடங்களில் இயல்புக்கு மீறியும் நடித்துள்ளார். வில்லன்களாக வரும் நான்குபேர்களில் ஒரு வயதானவர் பட்டயக்கிளப்பி இருக்கிறார். அவர் வரும்போதெல்லாம் படம் பார்க்கும் நமக்கு பீதி ஏற்படுகிறது. அப்படியொரு மிரட்டல் நடிப்பு. மற்ற மூவரும் கூட சிறப்பு தான்
சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை பெரிய ஏமாற்றம். ரா..ஆ என்ற சவுண்ட்களை எப்போது தான் விட்டுத்தொலைப்பாரோ? படத்தில் ஒளிப்பதிவு தரமாக அமைந்திருக்கிறது .
முதல்பாதி படம் மின்னல் வேகத்தில் நகர்கிறது. இரண்டாம் பாதியும் அப்படித்தான் நகர்கிறது. ஆனால் லாஜிக்? அவ்வளவு கொள்ளையடிப்பவர்கள் ஏன் இன்னும் அந்த ஆஸ்பிடலிலே இருக்க வேண்டும்? மேலும் கொலை செய்துவிட்டு மார்ச்சுவரியில் மறைத்து வைப்பதை எதோ விளையாட்டுப் பிள்ளைகள் போல் செய்கிறார்கள். இதேபோல கிலோ கணக்கில் லாஜிக் கேள்விகள் இரண்டாம் பாதியெங்கும். மேலும் படம் அரசு மருத்துவமனையில் அடித்தட்டு நிலையில் வேலை செய்பவர்களை அநியாயத்திற்கு கெட்டவர்களாக காட்டியுள்ளது. அவர்களின் மீது படம் பார்க்கும் பாமர மக்களுக்கு ஒரு பயம் ஏற்படும் அளவிற்கு ஒரு நல்லவர் கூட அரசு மருத்துவமனையில் இல்லை என்பதாக காட்டியிருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. மேக்கிங்-ஆக சிறப்பாக இருந்தாலும்,லாஜிக் ஓட்டையிலும், ஆபத்தான பார்வையிலும் தரமற்று ஒலிக்கிறது திருவின் குரல்
2.5/5
#ThiruvinKural #திருவின் குரல் #