இரட்டை தேசிய விருதுகள் – எல்லாப் புகழையும் மீண்டும் இறைவனுக்கே அர்ப்பணித்த ஏ.ஆர்.ரஹ்மான்
இந்த ஆண்டு தேசிய விருதுகள் பட்டியலில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன.
அந்த வகையில் ‘காற்று வெளியிடை’ படத்தின் பாடல்களுக்காகவும், ‘மாம்’ படத்தின் பின்னணி இசைக்காகவும் தலா ஒரு விருது வீதம் இரண்டு விருதுகளைப் பெறுகிறார் ரஹ்மான்.
இந்த இரட்டை தேசிய விருதுகளைப் பெறும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதையடுத்து தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, ” ‘காற்று வெளியிடை’ படத்துக்கு இந்த தேசிய விருது கிடைச்சது ரொம்ப சந்தோஷம். மணிரத்னம் சார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அவர் ஒரு ஐடியா கடல்னு சொல்லலாம். அவர்கிட்ட எந்த ஐடியா கொடுத்தாலும் அதை நல்லா பயன்படுத்திக்குவார்.”
“என் அருமை அண்ணன், மென்டார், மணிரத்னம் அவர்களுக்கு என்னோட நன்றி. அப்புறம் ‘காற்று வெளியிடை’ மொத்த டீமுக்கும் நன்றி. கார்த்தி, பாடலாசிரியர் கார்க்கி, வைரமுத்து, பாடகர்கள், என் டீம் எல்லோருக்கும் நன்றி. எல்லாப்புகழும் இறைவனுக்கே.” எனக் கூறியுள்ளார்.
மேலும், “மாம் படத்துக்காக ஶ்ரீதேவி சென்னைக்கு வந்து இசையமைக்கக் கேட்டாங்க. இந்தப் படம் ரொம்ப ஸ்பெஷல். நாட்டுக்கு இந்த நேரத்தில் இந்தப் படம் அவசியம்னு தோனிச்சு. அதனால் படம் பண்ணோம். இந்தப் படத்துக்கு நேஷனல் அவார்டு கிடைச்சது ரொம்ப சந்தோஷம். ஶ்ரீதேவியை ரொம்ப மிஸ் பண்றோம். எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று தெரிவித்துள்ளார்.