அப்பா என்.டி.ஆர், பெரியப்பா எம்.ஜி.ஆர், சித்தப்பா சிவாஜி : தமிழில் பேசி நெகிழ்ந்த பாலகிருஷ்ணா!

அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வேற்றுமொழி பிரபலங்கள் கூட தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழில் பேசி மகிழ ஆசைப்படுகிறார்கள்.
தப்பும், தவறுதலாக இருந்தாலுமே கூட தமிழ் மொழியில் பேசுவதை பெருமையாகக் கருதுகிறேன் என்று சொல்லுபவர்களும் உண்டு.
ஆனால் தமிழ்நாட்டிலிருக்கும் சில பதறுகளோ தமிழ் மக்களுக்கு ஹிந்தி பேசத்தெரியவில்லையே? என்று கொடுக்கின்ற காசுக்கு வஞ்சனையில்லாமல் கூவுகிறார்கள்.
”நானும் உங்களில் ஒருத்தன் தான். சென்னையில் பிறந்தவன், சென்னையில் வளர்ந்தவன். தமிழ்நாட்டு தண்ணிய குடிச்சி வளர்ந்தவன்.” என்று பெருமை பொங்க முடிந்தளவுக்கு தமிழில் பேசி நெகிழ்ந்தார் பிரபல தெலுங்கு ஹீரோவான பாலகிருஷ்ணா.
ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரித்திருக்கும் பிரமாண்டப்படம் தான் ”கெளதமி புத்ர சாதகர்ணி.”
நாயகியாக ஸ்ரேயா நடிக்க, மற்றும் கபீர்பேடி, தணிகலபரணி, சுபலேகாசுதாகர் இவர்களுடன் முக்கிய வேடத்தில் இந்தி நடிகை ஹேமாமாலினி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம் இது.
வசனத்துடன் தமிழாக்கப் பொருப்பேற்றிருப்பவர் தனக்கோடி புத்ர மருதபரணி. இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் அஞ்சனா புத்ர கிரிஷ். இவர் தமிழில் சிம்பு நடித்த ”வானம்” படத்தை இயக்கியவர். அத்துடன் தெலுங்கிலும் இந்தியிலும் பல வெற்றிப் படங்களை இயக்கிய முன்னனி இயக்குனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலகிருஷ்ணா பேசியதாவது…
”நான் சென்னையில் இந்த விழாவில் கலந்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சி. நானும் உங்களில் ஒருத்தன் தான். சென்னையில் பிறந்தவன், சென்னையில் வளர்ந்தவன். தமிழ்நாட்டு தண்ணிய குடிச்சி வளர்ந்தவன். என்னோட நூறாவது படத்திற்கு நிறைய கதைகளை கேட்டேன். புது மாதிரியாக ஏதாவது செய்யணும்னு நினைச்சுட்டு இருந்தேன். எதுவும் சரியா வரலே டைரக்டர் கிருஷ் இந்த கதையை சொன்னார் உடனே ஒகே சொன்னேன்.
இது நம்மை ஆண்ட ஒரு நம் மன்னனின் கதை. இந்த கதையை கேட்டவுடனே எங்கப்பா என்.டி.ஆர், பெரியப்பா எம்.ஜி.ஆர், சித்தப்பா சிவாஜி இவங்க இவங்களை நினைச்சுக்கிட்டேன். இவங்க இன்ஸ்பிரேசன் இல்லாம எந்த படங்களும் பண்ண முடியாது. இந்த படத்தில் நடித்தது என்னோட பெத்தவங்க ஆசியும் பெரியவங்க ஆசியும் தான்.
இது இல்லாம சாதகர்ணியோட அம்மா கவுதமியோட ஆசிர்வாதமும் சாதகர்ணியின் ஆசியும் தான் இந்த படத்தில் நான் நடித்தது. அம்மாவை பெருமைப்படுத்துங்கள். நிச்சயம் நல்லா இருப்போம். அடுத்ததா நான் கே.எஸ் ரவிகுமார் படத்திலே நடிக்கிறேன். சூட்டிங் கூட இங்க தான் கும்பகோணத்தில் 40 நாட்கள் நடக்குது. நானும் உங்களில் ஒருத்தன் தான். இந்த படத்தை குடும்பத்தோட போய் பாருங்க. தாயை பெருமைப்படுத்திய இந்த படம் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் பிடிக்கும்” இவ்வாறு பாலகிருஷ்ணா தமிழில் பேசினார்.
மற்றும் கே.எஸ். ரவிகுமார் நடிகர் கார்த்தி, இயக்குனர் கிருஷ், இசையமைப்பாளர் பட் தயாரிப்பாளர் நரேந்திரா, வசனகர்த்தா மருதபரணி மற்றும் சி.கல்யாண் காட் ரகட்டா பிரசாத் உட்பட பலர் பேசினார்கள். இசையை கார்த்தி வெளியிட கே.எஸ்.ரவிகுமார் பெற்றுக் கொண்டார்.