பழசை மறந்த பாபிசிம்ஹா! : இவருக்கு இன்னும் நாலு நேஷனல் அவார்டு குடுங்கப்பா…

‘நன்றி’ என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தத்தை இரண்டாவது முறையாக தந்திருக்கிறார் நடிகர் பாபி சிம்ஹா.
ஒருவேளை சாப்பாட்டுக்கு காசு கொடுத்தால் கூட போதும் என்கிற காலகட்டத்தில் உதவியவர்களை வளர்ந்த பிறகு திரும்பி கூட பார்க்க மனசு வராத கூட்டம் திரையுலகில் அதிகம்.
அந்த நன்றி கெட்ட உலகத்தில் நிரந்தரமாக ஒரு இடத்தை தனக்கென்று பிடித்து விடுவாரோ? என்று அச்சத்தை தருகிறது பாபி சிம்ஹா அடுத்தடுத்து அரங்கேற்றும் காரியங்களை பார்க்கும்போது!
சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சுற்றியிருந்த நண்பர்களின் தயவால் அவர்கள் எடுத்த குறும்படங்கள், மினிமம் பட்ஜெட் படங்களில் நடித்து மெல்ல மெல்ல வளர்ந்தார் பாபிசிம்ஹா. அப்படிப்பட்டவர் தனது நடிப்புத் திறமையால் ‘ஜிகர்தண்டா’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது வாங்குகிற அளவுக்கு உயர்ந்து விட்டார்.

அதன்பிறகு பாபிசிம்ஹா நடந்து கொள்வது தான் அவரது நண்பர்களுக்கு வருத்தத்தை தர ஆரம்பித்திருக்கிறது.
ஏற்கனவே பாபிசிம்ஹாவின் நெருங்கிய நண்பரான மருதுபாண்டியன் தான் இயக்கிய ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தில் அவரை ஹீரோவாக்கி அழகு பார்த்தார். அந்தப்படம் ரிலீஸ் ஆவதற்குள் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பாபிசிம்ஹா பிரபலமாகி விட்டார். அதன்பிறகு அந்த இயக்குநர் அந்தப் படத்தை ரிலீஸ் செய்வதற்குள் கூடுதலாக பணம் கேட்டு பாபிசிம்ஹா கொடுத்த குடைச்சல்கள் கொஞ்ச நஞ்சமில்லை.
இப்போது அதே மாதிரி ‘மீரா ஜாக்கிரதை’ என்ற படத்துக்கும் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
வருகிற மே 27ம் தேதி இந்தப்படம் ரிலீஸ் ஆகப் போவதாக பாபிசிம்ஹாவின் போட்டோக்களுடன் பேப்பர்களில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரெண்டாவது சீனிலிருந்து கிளைமாக்ஸ் வரை இந்தப் படத்தில் நடித்திருக்கும் பாபிசிம்ஹா ‘மீரா ஜாக்கிரதை’ படத்தில் நான் நடிக்கவே இல்லை. அந்தப் படத்தின் இயக்குநர் யார் என்றே எனக்குத் தெரியாது என்று அந்தப் படத்துக்கு எதிராக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
திரையுலகில் நன்றி மறப்பது புதிதல்ல… ஆனால் கஷ்டப்பட்ட காலத்தில் உதவி செய்த நண்பர்கள் நாலு காசு பார்க்க விடாமல் வயிற்றில் அடிப்பது எந்த மாதிரியான ‘டிசைன்’ என்று தெரியவில்லை.
இவருக்கு இன்னும் நாலு நேஷனல் அவார்டு குடுங்கப்பா…
Meera Jaakirathai Tamil Movie Official Trailer