ரஜினி, கமல், விஜய், சூர்யா : களை கட்டப்போகும் நட்சத்திர கிரிக்கெட்!
நாசர் தலைமையிலான ”பாண்டவர் அணி”யினர் நடிகர் சங்கத்தில் பதவிகளுக்கு வந்த பின்னர் தங்களது வாக்குறுதிகளில் ஒன்றான நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்கும் வேலையில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்கள்.
இதற்காக ஸ்டார் நைட் மாதிரியான நிகழ்ச்சி நடத்தப்பட மாட்டாது என்று அறிவித்த விஷால் அதற்குப் பதிலாக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு அதன் மூலம் வரும் வருவாயில் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டப்படும் என்றார்.
இப்போது அந்த போட்டி நடப்பதற்கான வேலைகள் வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது.
அதன்படி “நட்சத்திர கிரிக்கெட் போட்டி” (CCL) வரும் 17ம் தேதியன்று சென்னையில் நடைபெற இருக்கிறது.
மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த 6 ஓவர்கள் போட்டியில், ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் விளையாடுகிறார்கள்.
தமிழகத்தின் முக்கியமான மாவட்டங்களின் தலைநகர் பெயரில் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது “ ‘மதுரை காலேஜ்’, ‘சென்னை சிங்கம்ஸ்’, ‘நெல்லை டிராகன்ஸ்’, ‘தஞ்சை வாரியர்ஸ்’, ‘திருச்சி டைகர்ஸ்’, ‘ராமநாடு ரைனோஸ்’, ‘கோவை கிங்ஸ்’ மற்றும் ‘சேலம் சீட்டாஸ்’ என்று 8 அணிகளுக்கு பெயரிட்டிருக்கிறார்கள்.
இந்த 8 அணிகளுக்கும் கேப்டன்களாக சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா ஆகியோர் விளையாட இருக்கிறார்கள். இதில் எந்த அணிக்கு யார் கேப்டன் என்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் ரஜினி, கமல், அமிதாப், விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்களாம்.
இதுதவிர போட்டியின் விளம்பர தூதர்களாக அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியுள்ளன. கூடுதல் விபரங்கள் இன்னும் இரண்டு தினங்களில் அதாவது ஏப்ரம் 3-ம் தேதி வெளியாகிறது.