”இலங்கை தமிழர்கள் தான் புதுப்படங்களை ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியிடுகிறார்கள்”! : சேரன் பகிரங்க குற்றச்சாட்டு

மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ். P மற்றும் எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில் E.சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ் தயாரிப்பில் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘கன்னா பின்னா’.
திருமணம் செய்தால் அது அழகான பெண்ணைத்தான், அழகான பெண்கள் சென்னையில் தான் இருப்பார்கள் என திருச்சியில் இருந்து சென்னை வந்து அழகான பெண்களை தேடி அல்லோலப்படும் நாயகனின் கதைதான் இந்த ‘கன்னா பின்னா’.
இந்தப் படத்தின் இயக்குநர் தியா ‘நாளைய இயக்குனர்’ குறும்பட போட்டியில் கலந்து கொண்டவர். இந்தப் படத்தை இயக்கியுள்ளதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். நாயகியாக ‘வன்மம்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த அஞ்சலி ராவ் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ். தாணு கலந்து கொண்டு இசைத்தகட்டை வெளியிட்டார்., அவருடன் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், சேரன், தங்கர் பச்சான், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் & தயாரிப்பாளர் விஜயமுரளி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்..
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநரும், நடிகருமான சேரன் ‘திருட்டு டிவிடி’ பிரச்சனை குறித்து ஆவேசமாகப் பேசினார்…
“இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சிவா, நான் ஹீரோவாக நடிக்கும் போது எனக்கு ஜிம்மில் ட்ரெய்னிங் கொடுத்தவர். இந்தப் படத்தை தயாரித்தது மட்டுமல்லாமல் நடிகராகவும் மாறி இருக்கிறார். என்னோட ராசி என்னவென்றால், எனக்கு ஜிம் ட்ரெய்னிங் கொடுத்தவர்கள் எல்லோரும் ஹீரோவாக ஆகி விடுகிறார்கள். நடிகர் ஆரி எனக்கு ட்ரெய்னிங் கொடுத்தவர் தான். இப்போ ஹீரோ ஆகி விட்டார். அதேபோலத் தான் இவரும். நடிகராகி விட்டார்.
‘சினிமாவில் இன்றைக்கு தயாரிப்பளர்களின் நிலைதான் கேள்விக்குறியாக இருக்கிறது. ‘கபாலி’ மாதிரி படங்கள் தான் கோடிகோடியாக கொட்டுகின்றதே தவிர மற்ற தயாரிப்பாளர்கள் எல்லாம் கோடிகோடியாக இழந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சினிமாவை உங்களுக்கு பிடித்த இடத்தில் உங்கள் வசதிப்படி பார்ப்பது உங்கள் உரிமை. அது டிவிடியாக இருக்கட்டும்.. ஆன்லைனாக இருக்கட்டும்.. ஆனால் அது முறையாக இருக்க வேண்டும். திருட்டுத்தனமாக இருக்க கூடாது.. பலரின் உழைப்பையும் தயாரிப்பாளரின் பணத்தையும் சுரண்டும் தீமைக்கு நாம் துணைபோக கூடாது.
தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள்.. போலீசும் அதை தாண்டித்தான் தினமும் போய்வந்துட்டு இருக்கு. நம்மிடம் சட்டங்கள் சரியாக இல்லை. மத்திய மாநில அரசுகள் இதைப்பற்றி கவலைப்படவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது.. ஆனா அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான். இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம்.. எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிற போது, ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது” என இலங்கை தமிழர்கள் பக்கம் தாக்குதல் கணையை தொடுத்தார் சேரன்.