‘ரா ரா ரா’ : நயன்தாராவுக்காக குரல் கொடுத்த அனிருத்!
‘மாயா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து விரைவில் ரிலீசாக இருக்கும் படம் தான் ‘டோரா.’
நேமிசந்த் ஜபக் சார்பாக தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், தாஸ் ராமசாமி இயக்கத்தில், தயாராகி வரும் இந்தப் படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைப்பில் இடம்பெற்றுள்ள ‘எங்க போற டோரா’ மற்றும் ‘வாழ விடு’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே தனித்தனி ட்ராக்காக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அடுத்து இதே படத்துக்காக பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் குரலில் ‘ரா ரா ரா’ எனும் பாடல் ஒன்று விரைவில் வெளியாக இருக்கிறது.
மிகவும் ஆக்ரோஷமான இந்தப் பாடல், தீய சக்திகளை நயன்தாரா எப்படி வெல்கிறார்? என்ற காட்சியமைப்பில் உருவாகியிருக்கிறதாம்.
அனிருத்தின் வசீகரமான குரலும், நயன்தாரா பேசியுள்ள வசனங்களும் பாடலுக்கு வலு சேர்த்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
மேலும் புதிய முயற்சியாக ‘டோரா’ படத்தின் இசைத் தொகுப்பில் படத்தின் பிண்ணனி இசை மற்றும் தீம் மியூசிக் உள்ளிட்டவை இடம் பெற உள்ளதாம்.
‘டோரா’ படத்தின் இசை தொகுப்பினை சோனி மியூசிக் விரைவில் வெளியிடுகிறது.