திரெளபதி- விமர்சனம்
வணிகத்திற்காக வன்மத்தை விதைப்பதை கலையாகவுந் எற்றுக்கொள்ள முடியாது..கமர்சியலாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடகக் காதல் போலித்திருமணம் என்பதை அடிப்படையாக வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதான வன்மத்தைக் கொட்டி இருக்கிறார் திரெளபதி இயக்குநர்.
திரெளபதி என்பது ஒரு சமுதாயத்தின் குலதெய்வம். அதையே படத்தின் டைட்டிலாக்கி ட்ரைலரிலே இது எப்படியான படம் என்பதை உறுதி செய்திருந்தார் இயக்குநர். தன் பிரச்சனைகளைப் பேசுகிறேன் என்ற போர்வையில் பிறர் மீது எரிச்சலையும் அவதூறுகளையும் கொட்டுவது எப்படிப்பட்ட அடாவடித்தனம்.
நிற்க..
நாடகக்காதல் என்பது துளி கூட இல்லை என்றும், போலித்திருமணங்கள் நடைபெறுவதே இல்லை என்றும் நாம் சொல்லவில்லை. ஆனால் அந்தப் பிரச்சனைகளைச் சொல்கின்ற தொனியில் ஒரு குறைந்த பட்ச அறமாவது இருக்க வேண்டுமல்லவா?
நீ நான் என்று கை நீட்டிப் பேசக்கூடாது என்கிறார் ஹீரோ ரிச்சர்ட். ஆதிக்க மனநிலையை ஒரு படத்தில் ஹீரோவே முன்னிறுத்திவது எவ்வகை நியாயம்? முக்கியப் பிரச்சனைகளைப் பேசுகிறேன் என்ற பெயரில் ஒரு சார்பு நிலையையே கையில் எடுத்துள்ளார் இயக்குநர். கருத்தியலில் இப்படி நிறைய ஏற்றுக்கொள்ள முடியாத விசயங்கள் இருக்கிறது என்றால்..படத்தின் காட்சியமைப்புகளிலும் எந்தவொரு நேர்த்தியும் தென்படவே இல்லை. லாஜிக் என்பது மருந்துக்கும் இல்லை. விறுவிறு திரைக்கதையும் மிஸ் ஆகி இடைவேளைக்குப் பிறகு படம் ரொம்பவே டல் அடிக்கிறது. நாயகனாக ரிச்சர்ட் ஓரளவு ஈர்க்கிறார். நாயகி ஷீலா பாவம். அவரின் பர்சனல் வாழ்வுக்கு நேர்மாறான கேரக்டர் என்பதாலோ என்னவோ அந்தக் கேரக்டருக்கு அவர் துளியும் பொருந்தவில்லை.
கருத்தியலாகவும் காட்சிப்படுத்தலாகவும் திரெளபதி துளியும் ஈர்க்காத சினிமா. ஆனால் சாதிய உணர்வு என்ற பெயரில் சாதிவெறியை திரையில் தெளித்து படத்தைப் பணமாக்கும் வித்தையில் இயக்குநர் தேறி விட்டார். சினிமாவில் இந்த மாற்றம் நிச்சயம் முன்னேற்றம் அல்ல!
2/5