கால்ல சுளுக்கு; அதனால பத்து நாள் ரெஸ்ட்டு! : நல்லாவே சமாளிக்கிறீங்க இனியா

கோடிகளைக் கொட்டி படமெடுக்கிற தயாரிப்பாளர் தன் படத்தை விளம்பரப்படுத்த படத்தின் நாயகன், நாயகி உள்ளிட்டவர்கள் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை.
ஆனாலும் தயாரிப்பாளர்கள் அந்த எதிர்பார்ப்பை இப்போதுள்ள நடிகர், நடிகைகள் சட்டை செய்வதே இல்லை.
நயன்தாரா தொடங்கி வைத்த இந்த நியாயமில்லாத வேலையை மார்க்கெட் இல்லாத நடிகைகள் கூட இப்போது தொடர ஆரம்பித்திருப்பது தான் தயாரிப்பாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சில தயாரிப்பாளர்கள் இதை வெளிப்படையாகப் பேச யோசித்தாலும், சிலரோ தைரியமாக மேடைகளில் பேசி விடுவார்கள்.
அப்படித்தான் ‘சதுர அடி 3500’ படத்தின் ஆடியோ பங்ஷனுக்கு அப்படத்தின் நாயகன் ரகுமான், நாயகி இனியா இருவருமே வராததை விழா மேடையிலேயே படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் கண்டித்தனர்.
அதற்கு பதிலளித்துப் பேசிய விழாவின் சிறப்பு விருந்தினர் கே. பாக்யராஜ் ‘கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போகுது’… என்று விழாவுக்கு வராமல் போன இனியா குறித்து பாக்யராஜ் கமெண்ட் அடித்தார். அவருடைய அந்தக் கமெண்ட் வைரலானதையடுத்து விஷயம் இனியாவின் காதுகளையும் எட்டியிருக்கிறது.
இதனால் பதறிப்போன இனியா தான் ஏன் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தைக் கூறியிருக்கிறார். படியுங்களே நீங்களே விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்…
“சில நாட்களுக்கு முன்பு எனக்கு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது. அதனால் சரியாக நடக்க முடியவில்லை. இதனால் 10 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர் சொல்லி விட்டார். இசை வெளியீட்டு விழாவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் மட்டும்தான் வந்தது. அழைப்பிதழ் வரவில்லை. காலில் பிரச்சினை இருப்பதால் விழாவுக்கு வர முடியாது என்று ஏற்கனவே படக்குழுவுக்குத் தெரிவித்தேன்.
என் காலை புகைப்படம் எடுத்தும் அனுப்பி வைத்தேன். போகக் கூடாது என்ற எண்ணம் எதுவும் இல்லை. பாக்யராஜ் சார் சீனியர் அவரை மதிக்கிறேன். படக்குழு சொன்ன தகவலை வைத்து அவர் மேடையில் இப்படிப் பேசி இருக்கிறார். அதில் எனக்கு வருத்தம் இல்லை. இந்த சம்பவத்தால் என்னை பொறுப்பு இல்லாதவர் என்று நினைக்க வேண்டாம்,” இவ்வாறு இனியா கூறியிருக்கிறார்.
கால் சுளுக்குக்கு பத்து நாள் ரெஸ்ட்டா கேட்கவே காமெடியா இருக்குல்ல..?