மீண்டும் ‘நீயா 2’ – மூன்று கதாநாயகிகளுடன் டூயட் பாடும் ஜெய்
கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979 – ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ”நீயா”.
இன்றுவரை ஹிட்டான ஹாரர் மூவி படங்களுக்கு “நீயா” ஒரு முன் உதாரணம் என்று சொல்லலாம். அப்பேர்ப்பட்ட அந்தப்படம் மீண்டும் 39 – வருடங்களுக்கு பின் அதே பெயரில் “நீயா2” என்ற பெயரில் மிகப் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.
கதைக்கு தேவைப்பட்டதால் “நீயா2” என்று பெயர் வைத்துள்ளேன் என்கிறார் இப்படத்தின் இயக்குநர் எல்.சுரேஷ்.
இதில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறுகிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய நானும் கேமராமேனும் இந்தியா, தாய்லாந்து நாடுகளில் தேடினோம். இறுதியாக பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தோம். அதன் அமைப்பு, உடல்மொழி, தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும் தெரிந்து கொண்டோம். இந்த ராஜநாகம் படம் முழுக்க வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக இதன் காட்சிகள் அமைந்துள்ளது.
படத்தில் வித்தியாசமான வேடத்தில் நாயகனாக ஜெய் நடிக்கிறார். அவர் இரண்டு வித பரிமாணத்தில் கண்டிப்பாக அசத்துவார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடிக்கிறார், மேலும் ராய்லட்சுமி , கேத்தரின் தெரேசா நாயகியாக நடிக்கிறார்கள்.
இவர்களுடன் பாலசரவணன் மற்றும் பலர் நடிக்கும் இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைப்பெற்றது. தொடர்ந்து , தலக்கோணம் , சென்னை , மதுரை , கொடைக்கானல், சாலக்குடி பகுதிகளில் நடைபெறும்.
அழுத்தமான காதல் கதையுடன் காமடி கலந்த ஹாரர் படமாக சுமார் 10 – கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தை ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரிக்கிறார். திரையுலகில் பலவருடங்கள் தயாரிப்பு துறையில் அனுபவம் பெற்ற இவர் தயாரிக்கும் முதல் படம் இது.