ரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்து போன ஜோதிகா
சுமார் 8 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் படம் ’36 வயதினிலே.’
சூர்யா தனது 2டி எண்டர்டெயிமெண்ட் பட நிறுவனம் சார்பில் தயாரித்த இப்படம் மலையாளத்தில் ரிலீசாகி வசூலை வாரிக்குவித்த ஹை ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீமேக். மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய ரோஸன் ஆண்ட்ரூஸ் தான் தமிழிலும் இயக்கியிருந்தார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்துக்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள்.
இந்த மாபெரும் வரவேற்பைப் பார்த்து நெகிழ்ந்து போயிருக்கும் ஜோதிகா கணவர் சூர்யாவின் ட்விட்டர் மூலமாக தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது :
“’36 வயதினிலே’ படத்துக்கு நீங்கள் காட்டிய அன்பும், மரியாதையும் என்னை நெகிழ வைத்துள்ளது. இந்தப்படம் எனக்கு மட்டுமல்ல, சூர்யா, இயக்குநர் ரோஷன் என அனைவருக்கும் மறக்க முடியாது வரவேற்பை அளித்துள்ளது.
இப்பட வாய்ப்பு என் கதவுகளை தட்டியபோது அதை நான் வரவேற்று ஏற்றுக் கொண்டேன். அதற்குக் காரணம் இல்லத்தரசிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும், அவர்கள் பல்வேறு பணிகளை ஒரு சேர செய்கின்றனர் என்ற நெருப்பு என்னுள் எப்போதுமே இருந்தது. அதன் காரணமாகவே, நான் இப்படத்தில் நடித்தேன். ஆணாதிக்கம் மிகுந்த திரைத்துறையில் கதாநாயகிகளுக்கு சிறப்பிடம் தரப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணின் சுயமரியாதை, நம்பிக்கை, சாதனை எல்லாம் அவள் திருமண பந்தத்தால் ஏற்படும் அந்தஸ்தில் மட்டும் இல்லை. மாறாக அவள் அவளது கனவுகளை எப்படி மெய்ப்பட வைக்கிறாள் என்பதிலேயே உள்ளது.
’36 வயதினிலே’ திரைப்படத்துக்கு நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவால் நான் இன்று பெருமிதம் கொள்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த நீங்கள் அனைவரும் மகளிர் மேம்பாட்டுக்கு வித்திடும், நிறைய வசந்திகள் தங்கள் கனவுகளை கைப்பற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்.” இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜோதிகா.