விஜய் – அஜித் படங்கள் வேண்டாம் : காஜல் அகர்வால் சலிப்பு!

30 வயசைத் தாண்டி விட்டாலே நடிகைகளை ஓய்வெடுக்க அனுப்பி விட முடிவு செய்து விடுவார்கள் ரசிகர்கள்.
விதி விலக்காக த்ரிஷா, நயந்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால் போன்ற ஒரு சில நடிகைகளை மட்டும் இன்னும் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கும் அறிமுக நாயகிகளுக்கு கடும் போட்டியாக இவர்கள் இருந்தாலும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஹீரோக்களுடன் மரத்தை சுற்றி வந்து டூயட் பாடுவது என்று யோசிக்க ஆரம்பித்திருப்பதும் சமீபகாலமாக கண்கூடாகத் தெரிகிறது.
அந்த வகையில் நயன்தாரா, த்ரிஷா போன்றோர் ‘மாயா’, ‘நாயகி’ என நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆனால் காஜல் அகர்வால் மட்டும் விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடிக் கொண்டிருந்தார். இப்போது அவரும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேட ஆரம்பித்திருக்கிறார்.
தற்போது ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’, விக்ரமுடன் ‘கருடா’ ஆகிய படங்களில் நடித்து வரும் காஜல் புதிதாக தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் இருந்தால் சொல்லுங்கள் என்கிறாராம்.
அது மட்டுமல்ல… இனிமேல் அஜித், விஜய் படங்களாகவே இருந்தாலும் அதில் கொஞ்சமாவது நாயகிக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்களின் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட வேண்டும் என்றும் முடிவெடுத்திருக்கிறாராம்.