”இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்…” – கமல்ஹாசன் ‘கலகல’ பேச்சு!!
‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம் ஒத்த செருப்பு சைஸ் 7.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன், ”’புதிய பாதை’ படத்தில் நடிக்க என்னை தான் அணுகினார் பார்த்திபன். கால்ஷீட் இல்லாததால் என்னால் அதில் நடிக்க முடியவில்லை, அது ரொம்ப நல்லதாக போய் விட்டது. அதனால் தான் பார்த்திபன் போன்ற ஒரு நல்ல நடிகர் நமக்கு கிடைத்தார்.
’16 வயதினிலே’ படத்தில் பாக்யராஜ் நாட்டு வைத்தியராக நடித்திருப்பார், பின்னாளில் தமிழ் சினிமாவுக்கே நாட்டு வைத்தியராக மாறி இருக்கிறார். அவரின் சிஷ்யன் பார்த்திபன் ஒரு கதாபாத்திரம் மட்டுமே நடிக்கும் தனித்துவமான ஒரு தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். ராபர்ட் ரெட்ஃபோர்ட், டாம் ஹார்டி ஆகியோர் வரிசையில் பார்த்திபன் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி.
எனக்கு காந்தி வரலாற்று புத்தகத்தை பார்த்திபன் அன்பளிப்பாக வழங்கினார், அதில் இந்த படத்தின் தலைப்புக்கு பொருத்தமாக ஒரு சம்பவம் வரும். ரயில் ஏறும்போது காந்தியடிகளின் ஒரு செருப்பு தவறி விடும், உடனே அடுத்த செருப்பை தூக்கி வீசி விடுவார். யாருக்காவது உபயோகப்படும் என்று. அந்த மாதிரி எனக்கு ஒரு செருப்பு கிடைத்து விட்டது. இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” என்றார் உலக நாயகன் கமல்ஹாசன்.
விழாவில் தோஹா ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து அவர்களுக்கு உலக உருண்டையில் தங்க காலணி பதித்த ஒரு அன்பளிப்பை அளித்து மரியாதை செய்தனர் படக்குழுவினர். கமல்ஹாசன் அவர்களுக்கு டார்ச் லைட் பதித்த வெள்ளி செங்கோலை அன்பளிப்பாக வழங்கினார் பார்த்திபன்.
இந்த விழாவில் தயாரிப்பாளர்கள் வெங்கட், செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன், எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா, பாடலாசிரியர் விவேக், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, கிருஷ்ணமூர்த்தி, கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.