பெரிய ஹீரோக்களை நம்பினால் தமிழ்சினிமா அழிந்து விடும்! : சினேகன் ஆவேசம்
பெயரில் இருக்கும் சினேகம் பழகுவதிலும் இருந்தாலும் பேச்சு என்று வந்து விட்டால் தீப்பொறி பறக்கும்.
அப்படித்தான் இருந்தது சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு.
உளவுத்துறை பட இயக்குநர் எஸ்.டி.ரமேஷ் ஆரம்பித்திருக்கும் புதிய முயற்சியான குறும்பட திரைப்பட விழா அறிமுக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பாடலாசிரியர் சினேகன்.
திருட்டு விசிடியால் தமிழ்சினிமா மொத்தமாக அழிந்து கொண்டிருக்கிறது. என்னுடைய வஜ்ரம் படத்தை இணையதளத்தை 5க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள். ஆனால் தியேட்டர்களில் ரிலீசான போது கூட்டமே வரவில்லை என்று தியேட்டர் உரிமையாளர்கள் சொன்னார்கள். இப்படி இணையதளத்தில் படம் பார்ப்பதை கல்லூரி மாணவர்கள் தான் அதிகம் விரும்புகிறார்கள்.
அதனால் தான் அவர்களை அந்த சிந்தனையிலிருந்து மாற்றி இந்த குறும்பட விழாவில் கலந்து கொள்ளச் செய்து அவர்களை ஊக்குவிக்க இந்த குறும்பட விழாவை ஆரம்பித்திருக்கிறேன் என்றார்.
திருட்டி விசிடி தமிழ்சினிமாவை அழித்து வருகிறது என்று எஸ்.டி.ரமேஷ்செல்வன் புலம்ப பின்னர் பேசிய பாடலாசிரியர் சினேகனோ ஒருபடி மேலே போய் மாஸ் ஹீரோக்கள் மீது பாய்ந்தார்.
அவர் பேசும்போது “தமிழ்சினிமாவில் இப்போதும் பெரிய பெரிய ஹீரோக்களின் பின்னால் போகும் பழக்கம் தொடர்கிறது. அது தமிழ்சினிமாவின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. பெரிய ஹீரோக்கள் எல்லாம் வருஷத்துக்கு ஒரு படமோ அல்லது இரண்டு படங்களோ தான் நடிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை நம்பினால் தமிழ்சினிமா சீக்கிரமே அழிந்து விடும். சின்ன சின்ன படங்களின் எண்ணிக்கை தான் ஒவ்வொரு வருஷமும் அதிகமாக இருக்கிறது.
அந்தப் படங்களால் தான் தமிழ்சினிமா இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால் சின்ன படங்களுக்கு ரசிகர்கள் உட்பட எல்லோரும் ஆதரவு தர வேண்டும் அப்போது தான் சினிமா ஆரோக்கியமாக இருக்கும்” என்றார்.
நீங்க சொல்றதுல உண்மை இருக்கு, ஆனா கேட்கிறதுக்குத்தான் ஆள் இல்ல….அப்படித்தானே சினேகன் சார்..?
