சிம்புவுக்காக இறங்கி வந்த மணிரத்னம்!
சிம்பு கொடுத்த வாக்குறுதியை நம்பி படமெடுத்ததால் தனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம், அந்த நஷ்டத்தை அவர் தான் தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
அதோடு சிம்புவை வைத்து படமெடுத்தால் ஒரு தயாரிப்பாளர் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரும் என்பதையும் அவர் பட்டியலிட்டிருந்தார்.
மைக்கேல் ராயப்பனின் இந்தக் குற்றச்சாட்டுகளைப் பார்த்தவர்கள் அவரைப்போலவே இன்னொருவர் மீதும் பரிதாபப் பார்வை பார்த்தனர்.
ஆமாம், அவர் பிரபல இயக்குனர் மணிரத்னம்.
மணிரத்னம் இயக்கி வரும் மல்ட் ஸ்டார் படத்தில் சிம்புவும் ஒரு ஹீரோவாக நடிக்கிறார். இந்த நிலையில் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் வந்ததையடுத்து மணிரத்னம் ரொம்பவே அப்செட்டாகி காணப்பட்டார் என்கிற செய்தி பரவியது. கண்டிப்பாக சிம்புவை தனது படத்திலிருந்து மணிரத்னம் நீக்கி விடுவார் என்றே எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் சிம்புவுக்கு ஆதரவாக இறங்கி வந்திருக்கிறார் மணிரத்னம்.
ஒவ்வொருவருக்கும் பிரச்சனைகள் வருவதெல்லாம் இயற்கை தான். இதற்கெல்லாம் வருத்தப்படக்கூடாது. தயாரிப்பாளர் சங்கப் பிரச்சனைகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் என் படத்தில் நீங்கள் நடிக்கப் போகும் கேரக்டருக்கு மட்டும் கவனம் செலுத்துங்கள், மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறார்.
மணிரத்னமே தன் பக்கம் நிற்கும் போது ஏன் கவலைப்பட வேண்டும் என்று நினைத்த சிம்பு அவர் படத்துக்காக உடல் எடையைக் குறைத்து முழுமூச்சில் நடிப்பதற்குத் தயாராகி வருகிறார்.
வருகிற டிசம்பர் 20-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.