தமிழ்நாட்டில் பெரிய கலைஞர்கள் மூன்றுபேர் தான்- அமீர்

அபி சரவணன் வெண்பா நடிப்பில் மருத்துவர் அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள படம் மாயநதி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இயக்குநர் அமீர் பேசியதாவது,
“நம் தமிழ்நாட்டில் இன்று மூன்றே கலைஞர்கள் தான் பெரிய கலைஞர்கள். இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பற்றிய பதிவுகளை உடனடியாக பதிய வேண்டும். அதனால் இளையராஜா பற்றிய பதிவுகளை யுவன்சங்கர் ராஜா பதிவு செய்ய வேண்டும். இதை எல்லாம் அரசு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். நம் சங்கங்கள் எல்லாம் இப்போது மூடுவிழா கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. வளரும் நடிகர்கள் சமூக சேவை செய்கிறார்கள். நல்ல விசயம் தான். ஆனால் அது அவர்களுக்கு நல்லதல்ல. இங்கு சேவை என்பது வேற. அரசியல் என்பது வேற.
இங்கு பொது விசயங்களை செய்தால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதை நானே அனுபவித்து இருக்கிறேன். தமிழ்சினிமாவில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் சினிமா தான் இங்கு ஆண்டு கொண்டிருக்கிறது. ஆனால் சினிமா முன்னேறவே இல்லை. இங்கு சினிமாவில் இருக்கும் பலரும் எம்.ஜி.ஆர் ஆக முயற்சிக்கிறார்கள். எம்.ஜி.ஆர், கலைஞர் ஆகியோரிடம் இருந்த ஆட்கள் எல்லாம் அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொண்டார்கள். அவர்கள் சினிமாவிற்கு எதுவும் செய்யவில்லை.