”பொழுதுபோக்குக்காக போராடவில்லை” – அதிர வைத்த சீமான்!

Get real time updates directly on you device, subscribe now.

மு.களஞ்சியம் இயக்கத்தில் சீமான் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ‘முந்திரிக்காடு’.

ஆணவப் படுகொலையைப் பற்றி பதிவு செய்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அய்யா நல்லக்கண்ணு, சி.மகேந்திரன், இயக்க்குனர் ராஜூ முருகன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது, “களஞ்சியத்தின் கனவுப்படைப்பாக முந்திரிக்காடு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நான் இடம் பெற்றதற்காக மிகவும் மகிழ்கிறேன். புரட்சி என்றால் என்ன என்று எங்களுக்கு கற்று கொடுத்த மகேந்திரன் அவர்களின் மகன் தம்பி புகழுக்கு பட்டம் கொடுக்கச் சொன்னார் ராஜு முருகன். இங்கு எழுச்சி புரட்சி என்றால் என்ன என்பதே தெரியாதவன் எல்லாம் பட்டம் வைத்திருக்கிறான். அதனால் இந்தப் பட்டத்திற்கு தகுதியானவரின் மகனான தம்பி புகழுக்கு ‘எழுச்சி நாயகன்’ என்ற பட்டத்தைக் கொடுக்கலாம்.

சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் கலக்கட்டும் என்று கவிதை எழுதும் நிலையில் சமூகம் இருக்கிறது. தலைக்கு தொப்பி தைக்கிறவன் உயர்ந்தவன் காலுக்குச் செருப்பு தைத்தவன் கீழானவன் என்கிறான். இந்த ‘முந்திரிக்காடு’ படம் ‘பரியேறும் பெருமாள்’ ஏற்படுத்திய தாக்கத்தை விட அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Related Posts
1 of 138

ஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் சதிமத உட்பகை தான் நம்மை வீழ்த்துகிறது. நம்மை ஒன்றுபட விடாமல் பார்த்துக் கொள்கிறது. சாதிய எண்ணம் கொண்டவன் இறைவனை வணங்குவதற்கே தகுதி இல்லாதவன். அவன் அரசியலுக்கு நாடு நாசமாகப் போய்விடும் என்கிறார் முத்துராமலிங்கத்தேவர். ஆனால் அவரையே ஒரு சாதியக் குறியீடாக வைத்து விட்டார்கள். சாதிய விடுதலை, மதவிடுதலை, பொருளாதார விடுதலை, எதுவுமே இன்னும் இந்தியாப் பெறவில்லை. வெறும் அரசியல் விடுதலை மட்டும் தான் பெற்றுள்ளோம்.

மருத்துவமனையில் ரத்தம் தேவைப்படும்போது எவனும் சாதி பார்ப்பதில்லை. காரணம் சாதிக்கு ரத்தவெறி இருக்கு. ரத்தத்திற்கு சாதி வெறி இல்லை. கோயில்களில் இருக்கும் சாதி திரையரங்களில் செத்துப்போய்விட்டது. அதனால் இப்போது திரை அரங்குகளை அதிகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இந்திய நிலத்திலே பெருமைக்குரியவர் அய்யா நல்லக்கண்ணு அவர்கள் தான்.

நாங்கள் பொழுது போக்கிற்காக போராடவில்லை. எங்களுக்கு அடுத்த தலைமுறையாவது நன்றாக வாழ வேண்டும் என்று தான் போராடுகிறோம். அப்படியான போராட்டக்காரர்களில் ஒருவனான தம்பி களஞ்சியம் இயக்கி இருக்கும் முந்திரிக்காடு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும். இதைப் படமாக நான் பார்க்கவில்லை. ஒரு அரசியல் களமாகப் பார்க்கிறேன். இந்தப்படம் பெரிய அதிர்வலைகளை கிளப்பும்” என்றார்.