இழிவான கருத்துகளை பதிவு செய்திருக்கிறார் – எஸ்.வி.சேகருக்கு நடிகர் சங்கம் கண்டனம்
ஊடகப் பெண்களைப் பற்றி மிகவும் கீழ்த்தரமான கருத்துகளை ஃபேஸ்புக்கில் பதிவு செய்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது.
அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும், முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குரியது, போற்றுதற்குரியது. ஆனால் எஸ்.வி.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை இழிவுபடுத்தும் ஒரு செய்தியை பதியவிட்டுருக்கிறார்.
பொதுவாக முகநூலில் நமக்கு வரும் கருத்து பதிவினை, நமக்கு உடன்பட்டால் மட்டுமே நாம் அதை மற்றவருக்கு அனுப்புவோம். அந்த வகையில் எஸ்.வி. சேகர் அவர்கள் தனக்கு வந்த பதிவின் கருத்துக்கு உடன்பட்டே மறுபதிவு செய்து இருக்கிறார்.
அதில் உள்ள கருத்து பதிவிற்கு அவர் தார்மீக பொறுப்பு ஏற்று கொள்ள வேண்டும்.
கலைத்துறையால் சமூகத்தில் அறியப்பட்ட இவர் பொறுப்பற்ற முறையில் பெண்களை இழிவாக பதிவு செய்துள்ளார். இதை தென்னிந்திய நடிகர் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.