படம் எடுக்க கோடி முக்கியமல்ல நல்ல கதை தான் முக்கியம்-ஆர் .வி .உதயகுமார் பேச்சு!
அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,
“இந்த பார்க் படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும் போது கதாநாயகன் தமன் மீது எனக்குப் பொறாமையாக இருக்கிறது. ஏகப்பட்ட முத்தக் காட்சிகள் எடுத்துள்ளார்கள். என்னைவிட வயதானவர்கள் எல்லாம் கதாநாயகனாக நடிக்கும் போது ,எனக்கு மட்டும் அமைச்சர் முதல் மந்திரி என்று வேடம் கொடுக்கிறார்கள் .எனக்கும் இப்போது கதாநாயகன் ஆசை வந்துவிட்டது. தமன் போன்றவர்கள், கதாநாயகர்கள் வாழும் வாழ்க்கையைப் பார்க்கும் போது எனக்கும் அந்த ஆசை வந்துவிட்டது.நான் இயக்கிய போதே நடிக்க வாய்ப்பு வந்தது. என் உதவி இயக்குநர்கள் பொறாமையால் தடுத்து விட்டார்கள்.
எத்தனைக் கோடியில் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். அது அவரவர் விருப்பம் .ஆனால் அதைவிட அதில் நல்ல கதை இருக்க வேண்டும், திரைக்கதை இருக்க வேண்டும். எது இருக்க வேண்டுமோ அது இருக்க வேண்டும். நான் கிழக்கு வாசல் ஒன்றரை கோடியில் எடுத்தேன், சின்ன கவுண்டர் இரண்டரைக் கோடியில் எடுத்தேன், எஜமான் நான்கு கோடியில் எடுத்தேன் .அதனால் கோடி என்பது பிரச்சினை இல்லை அதில் என்ன கதை இருக்கிறது என்பதுதான் முக்கியம்.
சினிமாவில் வருவதற்கு கஷ்டப்படுகிறார்கள். கஷ்டம் அனுபவத்தைத் தரும். அந்த அனுபவம் தான் நமது வாழ்க்கைக்கான அடித்தளம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் . எனக்கும் பாடல் எழுத வாய்ப்பு வருகிறது. எல்லாம் ஐட்டம் பாடல்களாக இருக்கின்றன.இன்று வருவதெல்லாம் உயிர் இல்லாத பாடல்களாக உள்ளன. நல்ல மெட்டு கொடுத்தால் தான் நல்ல வரிகள் எழுத முடியும், இது எனது அனுபவம் “என்றார்.