மானியம், விருது ரெண்டுமே கொடுக்கல… என்ன செய்யுது தயாரிப்பாளர் சங்கம்? : ஒரு தயாரிப்பாளரின் ஆதங்கம்!

”பார்வை ஒன்றே போதுமே” முரளி கிருஷ்ணா இயக்கி, இசையமைக்க, ஹைடெக் பிக்சர்ஸ் சார்பில் ரஃபி தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள ‘நேர்முகம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. பாடல்கள் குறுந்தகட்டைநடிகை நமீதா வெளியிட நடிகர் பாண்டியராஜன் பெற்றுக் கொண்டார்.
தயாரிப்பாளர் ஜின்னா, சுரேஷ் காமாட்சி, நடிகைகள் நமீதா, மீரா நந்தன், நடிகர்கள் பிரஜின், கூல் சுரேஷ் உள்பட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
விழாவில் நடிகர் பாண்டியராஜன் பேசும்போது, என்னோட முதல் படம் ‘ஆண்பாவம்’. விநியோகஸ்தர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டுனோம். ஒருத்தர் நேரா வந்தார். எல்லாம் நல்லாத்தான்யா இருக்கு. ஆனா நீ ஏன்யா நடிச்சன்னார்?? எனக்கு பகீர்னு ஆயிருச்சு.
வேற வழியில்லாம தயாரிப்பாளர் தன்னோடசொத்து கித்தெல்லாம் வித்து படத்தை ரீலீஸ் பண்ணினார். பல்லாவரத்துல படம் ஓடுற தியேட்டருக்குப் போயிருந்தேன். படமே ரொம்ப டல்லா தெரிஞ்சது. மொத்தமே 20 பேர் தான் படம் பார்த்துட்டு இருந்தாங்க. வீட்டுக்கு வந்து எங்கம்மா மடியில படுத்துட்டு என் படத்தை நான் நடிச்சுக் கெடுத்திட்டேன்மான்னு அழுதேன். தயாரிப்பாளர் மனசுக்குள்ள அழுதார்.
அன்னைக்கு நைட் ஷோ, அபிராமி தியேட்டர்ல இருந்து என் அஸிஸ்டெண்ட் போன் பண்ணான். அண்ணே, படம் நல்ல “டாக்”அப்டின்னாம். அந்த“டாக்”கைத் தான் நான் காலையில பல்லாவரத்துலயே பாத்துட்டனேன்னு சொன்னேன். அவன் மேனேஜர்கிட்ட போனைக் கொடுத்து பேசச்சொன்னான். கூட்டம் எப்டி இருக்குன்னு கேட்டேன். ஹவுஸ் ஃபுல்னு சொன்னார்.
நம்ம படத்துக்கு வந்த கூட்டம் இல்ல, ‘படிக்காதவன்’ படத்துக்கு வந்த கூட்டம், டிக்கெட் கிடைக்காம நம்ம படம் பாக்கிறாங்கன்னு சொன்னார். உடனே கிளம்பி அபிராமி தியேட்டர் போனேன். படம் பாத்த கூட்டத்துல ஒருத்தர், “ஏய், நீதான நடிச்சிருக்க”ன்னு கேட்டார். ஆமான்னு தலையாட்டினேன். ஒரு கையெழுத்து போட்டுக் குடுன்னார். போட்டுக் குடுத்தேன்.
இதை ஏன் சொல்றேன்னா, ‘நேர்முகம்’ படத்துல நிறைய புதுமுகங்கள் இருக்காங்க. இந்த வாய்ப்பு முக்கியமில்லை. இதுக்கு அப்புறம் பார்க்கப் போற விஷயங்கள் தான் முக்கியம். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்வாங்க. நேரடியாவே ”நீ காலி” அப்டின்னு பேசுவாங்க. எதையும் மனசுல ஏத்திக்காம உங்க வேலையை மட்டும் கரெக்டா செய்ங்க. கண்டிப்பா ஜெயிக்கலாம்.
சமீபத்துல சிங்கப்பூர் போயிருந்தேன். லிப்ட்ல என்னைப் பார்த்த ஒரு தமிழர் ”இப்போ தான் உங்களை உயிரோட பாக்கிறேன்”னார். அவர் சொல்ல வந்த விஷயம் என்னன்னா, திரையில் உங்களை பாத்திருக்கேன், இப்போத்தான் நேர்ல பாக்கிறேன் அப்டிங்கிறதுதான். ஆனா, அந்த நிமிட பரபரப்புல அவருக்கு அதை எப்டி சொல்றதுன்னு தெரியல.
அதே மாதிரி, இன்னொருத்தர், ”ஏன்ம்பா இப்போ உள்ள படங்கள்ல பார்க்க முடியலையே, ரொம்ப நாளா நீ நடிக்கலையா?”ன்னார். கடைசியா எப்போ படம் பாத்தீங்க?ன்னு கேட்டேன். பத்து வருசம் இருக்கும்னார். அவர் சொல்ல வந்த விஷயம் என்னன்னா, நீ நடிக்கிறது எனக்கு பிடிக்கும்… நெறைய படங்கள்ல நடின்னு அப்டிங்கிறது தான். அதை அவர் ஸ்டைல்ல சொல்லிட்டார். ஆனா, யார் என்ன சொன்னாலும் இந்த மாதிரி, நமக்கு நாமே டப்பிங் பண்ணி பாத்துக்க வேண்டியது தான் என்றார்.
“திருப்பதி லட்டு” படத்தின் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுக்கப்போகும் தயாரிப்பாளார் சுரேஷ்காமாட்சி பேசுகையில் விழாவை காரசாரமாக்கினார்.
”நேர்முகம்” ட்ரைலர் பார்க்கும் போது படம் பார்க்கும் ஆர்வம் வருகிறது. புதுமுகம் ரஃபி நன்றாக நடிக்கிறவர் என்று தெரிகிறது. இயக்குனர் முரளிகிருஷ்ணா அனுபவம் வாய்ந்தவர். அவர் தயாரிப்பாளரை காப்பாற்றிவிடுவார் என நம்பலாம். இங்கு நிறைய மீடியா சகோதரர்கள் இருப்பதால் முக்கியமான ஒரு செய்தியை சொல்லியாக வேண்டும்.
“சேதுபதி” படம் ரீலிசான அன்னைக்கே படம் டோரண்ட்ல வெளியாகிருச்சு. பல கோடிகள் போட்டு நாங்கள் தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு படம் எடுத்தா அன்னைக்கே இப்படி ஆன்லைன்ல வரதைப் பத்தி தயாரிப்பாளர்கள் அடங்கிய வாட்ஸ் அப்பில் செய்தியாகப் போட்டு வருத்தப்பட்டிருந்தேன். ஆனா யாரும் அதைப் பெரிசா எடுத்துக்கவே இல்லை. ஏன்னா யாரோ வீட்டில தானே தீ எரியுது நமக்கென்ன என்றிருந்து விடுகிறார்கள். யார் பண்றாங்க?ன்னு கண்டுபிடிக்கிறது ஒண்ணும் அவ்ளோ பெரிய விஷயமில்லை. ஆனா கண்டுபிடிக்கிறதை யாரும் பெரிசா எடுத்துக்கல. அதான் வருந்த வேண்டிய விஷயமா இருக்கு.
மானியம் கிடைக்காம 400 தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுறாங்க. மானியம் கொடுத்து 8 வருஷமாச்சு. ரெண்டு ஆட்சி மாறியாச்சு. தயாரிப்பாளர் சங்கத்துல மூணு தடவை நிர்வாகிகள் மாறியாச்சு. ஆனா, இந்த மானியம் விஷயத்துல இதுவரை ஒண்ணும் பெரிசா நடக்கலை. இவங்க நேரடியாக தமிழக முதல்வர்கிட்ட கேட்கல. இந்திய சினிமா 100வது ஆண்டு விழா கொண்டாடுனப்போ, 10கோடி கொடுத்தாங்க தமிழக முதல்வர். ஏன்னா அவங்க ஒரு நிரந்தர சினிமா கலைஞர். நிரந்தர சினிமா உறுப்பினர். சினிமா மேல அவங்களுக்கு அன்பு இருக்கு. அப்படிப்பட்டவங்க இதை நிறுத்தி வைக்கமாட்டாங்க. அவங்க பார்வைக்கு விஷயத்தை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கொண்டு போனாங்களா… அதுக்கு முயற்சி எடுத்தாங்களான்னு தெரியல.’
அதே மாதிரி 3 வருஷமா, தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கும் விழா நடக்கல. அதையும் யாரும் கேட்ட மாதிரி தெரியல. தேர்தல் நேரத்துல நாடகம் போடக்கூடாதுன்னு சொன்னா நாடகக்கலைஞர்கள் பாதிக்கப்படுவாங்கன்னு நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் கமிஷனரை நேரா பார்த்து பேசுறாங்க. மனு கொடுக்கிறாங்க. ஆனா, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், சங்க உறுப்பினர்களுக்காக அப்படி செயல்பட்ட மாதிரி தெரியல.
ஒரு படத்துக்கு மானியம் கேட்டு அப்ளிகேஷன் கொடுக்கிறப்போ அதற்கு கட்டணமாக ஒவ்வொரு படத்துக்கும் அந்த படம்சார்பாக ரூ.1000/-தயாரிப்பாளர் சங்கம் மூலமாக அரசுக்கு கடந்த எட்டு வருசமா போயிட்டிருக்கு. அதனால மானியம் கேட்டு விண்ணப்பிக்கிறது அந்தத் துறை சம்பந்தமான அரசு அதிகாரிகளுக்கு நல்லாவே தெரியும். எல்லாப் படத்தையும் பார்த்தாச்சுன்னும் சொல்றாங்க. ஆனா, ஏன் எட்டு வருசமா நிறுத்தி வச்சிருக்காங்க அப்டிங்கிறதுக்கு எந்த விபரமும் தெரியல. எனக்குத் தெரிந்து நாம் அரசை சரியான முறையில் அணுகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இனியாவது நடிகர் சங்கம் முதல்வரை அணுகுவதைப் போல் தயாரிப்பாளர் சங்கமும் அணுக வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள் என்று பேசினார் சுரேஷ் காமாட்சி.