அரசியல் எதுக்கு? ஏதாவது நல்லது பண்ணுங்க அது போதும்! : ரஜினியை விளாசிய ராதாரவி

சில வாரங்களுக்கு முன்பு ரசிகர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய ரஜினி ” நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் தான் இருக்கிறது” என்கிற பழைய ஒற்றை வரி பல்லவியை பாடி விட்டு ”காலா” படப்பிடிப்பில் பிஸியாகி விட்டார்.
இருந்தாலும் இந்த முறை ரஜினியின் பொலிடிக்கல் மைண்ட்டின் தீவிரத்தை உணர்ந்த அரசியல் பிரபலங்களும், திரையுலக பிரபலங்களும் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அந்த வரிசையில் எங்கு எப்போது பேசினாலும் கேலி, கிண்டல், நக்கல், நையாண்டியுடன் பேசும் நடிகர் ராதாரவியும் ரஜினியின் அரசியல் எண்ணம் குறித்து விளாசித் தள்ளியிருக்கிறார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராதாரவி ”மொழியின் வரலாறு தெரிந்தால் தான் நமது கலாச்சாரத்தை காப்பாற்ற முடியும். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்த பெருமை கலைஞர் கருணாநிதிக்கே சேரும். தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் இருக்கிறது. இதில் புதிதாக கட்சி தொடங்குபவர்களுக்கு கட்சி கொடிக்கு நிறம் கூட கிடைக்காத நிலை உள்ளது.
நிலைமை இப்படி இருக்கும் போது, நடிகர் ரஜினி அரசியல் கட்சியை தொடங்கக்கூடாது என்பது என் கருத்து. மக்களுக்கு உதவ வேண்டுமானால், ரஜினி தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து எதாவது நல்லது செய்யட்டும். அவர் அரசியல் கட்சி தொடங்கக் கூடாது என்பது என் கோரிக்கை” என்றார் ராதாரவி.