கமலுக்கும் எப்போது அரசியல் ஆசை வந்தது? : பொதுவெளியில் போட்டுடைத்த ரஜினி

ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்பது தான் பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தது.
ஆனால் அவரோ அது ஆண்டவன் கையில் தான் இருக்கிறது என்று சொல்லி சொல்லியே ரசிகர்களுக்கு சோர்வை உண்டாக்கியது தான் மிச்சம்.
இதற்கிடையே அவரது நண்பரும் சக நடிகருமான கமல்ஹாசன் தமிழகத்தில் நிலவும் உறுதியற்ற அரசியல் தன்மையை கண்காணித்து தானும் தீவிர அரசியலில் இறங்க முடிவெடுத்து அதற்கான வேலைகளைச் செய்து வருகிறார்.
அதற்கானவே அவ்வப்போது தமிழக அரசைப் பற்றி தொடர்ந்து விமர்சித்தவர், சமீபத்தில் ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டைப் பற்றியும் கிண்டலடித்தார்.
அரசியலில் இறங்க முடிவெடுத்தவுடன் ரஜினியை கமல் விமர்சித்தது பொது வெளியில் பரபரப்பாகப் பேசப்பட்டாலும் அதற்கு ரஜினி எந்த பதில் கருத்தும் சொல்லாமல் மெளனம் காத்து வந்தார்.
இந்நிலையில் நேற்று சென்னை அடையாறில் அரசு சார்பில் கட்டப்பட்ட சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் ரஜினியும் , கமலும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ரஜினி தன்னைப் பற்றி கமல் அடித்த கமெண்ட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசி பரபரப்பை கிளப்பினார்…
“நடிகர் திலகம் அரசியல் பாடத்தையும் நடிகர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். அவர் தேர்தலில் போட்டியிட்டபோது தோற்றுப் போனார். அது அந்த தொகுதி மக்களுக்குத்தான் அவமானம். வெறும் சினிமா புகழை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் ஜெயிக்க முடியாது என்பது தான் அது.
அரசியலில் ஜெயிக்க பெயர், புகழ் மட்டும் போதாது. அதற்கு என்ன வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும். எனக்கு சத்தியமா தெரியாது. ஆனால் கமல்ஹாசனுக்கு தெரியும் என நினைக்கிறேன். அந்த ரகசியத்தை கமல் தெரிவிக்க மாட்டார். ஒரு வேளை 2 மாதத்துக்கு முன்பு கேட்டிருந்தால் சொல்லியிருப்பாரோ என்னவோ? ”என் திரையுலக அண்ணா நீங்க சொல்லுங்க…” என்று கேட்டாலும் சொல்ல மாட்டார். என்னுடன் வந்தா சொல்லித் தருகிறேன் என்கிறார்” என்றார் ரஜினி.
அதாவது கமலுக்கு அரசியல் ஆசை கடந்த இரண்டு மாதங்களாகத்தான் வந்திருக்கிறது. அதற்கு முன்பு வரவில்லை என்பதைத்தான் ரஜினி இப்படி மறைமுகமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.