இமயமலைக்கு செல்வது ஏன்? – ‘காலா’ விழாவில் மனம் திறந்த ரஜினி
ஒவ்வொரு படம் ரிலீசான பிறகும் இமயமலைக்குச் செல்வதை கடந்த சில வருடங்களாக வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினி.
மன நிம்மதிக்காகத் தான் அவர் அடிக்கடி இமயமலைக்குச் செல்கிறார் என்று திரையுலகினரும், ரசிகர்களும் நினைத்துக் கொள்வார்கள்.
ஏன் ரஜினியே கூட நிம்மதிக்காக நான் அங்கு செல்வதாக சில தடவை சொல்லியிருக்கிறார்.
ஆனால் உண்மையிலேயே தான் இமயமலைக்குச் செல்வது ஏன் என்பது பற்றிய சீக்ரெட்டை நேற்று உடைத்தார் ரஜினி.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மே 9-ம் தேதி மாலை மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.
சுமார் 10 ஆயிரம் ரசிகர்கள் ஒன்று திரண்ட இவ்விழாவில் ரஜினி பேசியபோது, ”இது இசை வெளியீட்டு விழா போன்றே இல்லை. மாறாக படத்தின் வெற்றி விழா போல உள்ளது. சிவாஜி பட வெற்றியை கொண்டாடிய போது கருணாநிதி அவர்கள் வந்து பேசினார்கள். அவர் பேச்சை விரும்பும் பலரில் நானும் ஒருவன். அவர் குரலை விரைவில் கேட்க பிரார்த்தனை செய்கிறேன்.
எனக்கு உடல்நலம் சரியில்லாததால் எந்திரன் வெற்றியை கொண்டாடவில்லை. உடலையும், மனதையும் நன்றாக வைத்திருந்தால் சீக்கிரம் குணமடைவீர்கள் என்று கூறினார்கள். எனக்கு நடிப்பை தவிர வேது எதுவும் தெரியாது.
புத்திசாலிகளுடன் பழகலாம், அறிவுரை கேட்கலாம். ஆனால் அதிபுத்திசாலிகளிடம் ஆலோசனை கேட்கக் கூடாது. ஏனென்றால் அவர்கள் பல யோசனை, திட்டங்கள் வைத்திருப்பார்கள்.
‘லிங்கா’ கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால் தண்ணீர். தண்ணீர் பஞ்சம், நதி என்பதால் என்னை அறியாமலேயே அதில் ஒரு ஈடுபாடு வந்தது. தண்ணீரில்லாமல் கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்காக ஒரு அணை கட்ட வேண்டும் என்கிற கதாபாத்திரம். நதிகளை இணைக்க வேண்டும் என்பது என் ஆசை. அதனால் தான் அந்தப் படத்தில் நான் நடித்தேன்.
நான் அடிக்கடி இமயமலைக்கு போவதே அந்த கங்கையை பார்க்கத் தான். கங்கையை பார்க்க அற்புதமாக இருக்கும். என் வாழ்க்கையில் ஒரே கனவு நதிகள் இணைப்பு. தென்னிந்திய நதிகளை இணைத்து விட்டால் மறுநாளே நான் கண்ணை மூடினால் கூட பரவாயில்லை.
லிங்கா படம் கொஞ்சம் சரியாக போகாததால் அதுதான் என்னுடைய கடைசி படம் என்று கூட சிலர் பேசினார்கள். இதைத் தான் 40 ஆண்டுகளாக அவர்கள் பேசி வருகின்றனர். என்னடா இந்த குதிரை ஓடிட்டே இருக்கே, 10 வருஷம், 20 வருஷம், 30 வருஷம், 40 வருஷம் பார்த்தாங்க இன்னும் நிக்காம ஓடுதேன்னு.. நானா ஓடுறேன், ரசிகர்களாகிய நீங்கள் ஓட வைக்கிறீர்கள். ஆண்டவன் ஓட வைக்கிறான்.
யார் என்ன சொன்னாலும் சரி. என் ரூட்ல நான் போய்க்கிட்டே இருப்பேன். ஊடகங்கள் எதிர்பார்ப்பு எனக்கு புரிகிறது. நான் என்ன செய்யறது கண்ணா இன்னும் நேரம் வரலை. நேரம் வந்து விட்டால் மக்கள் ஆதரவுடன் தமிழகத்துக்கு நல்லது நடக்கும்’’ என்றார் ரஜினி.
இசை விழா மேடையில் ரஜினி தனது மரணத்தை பற்றி பேசியதும் பதட்டமடைந்த ரசிகர்கள் ”தலைவா அப்படி சொல்லாதீங்க..” என்று அலறினார்கள்.