அமிதாப் மாதிரியே ரஜினி மண்டையிலும் ஒன்றுமில்லை: கர்ஜித்த மார்க்கண்டேய கட்ஜூ

ரஜினி எப்போதெல்லாம் திரையுலகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாரோ? அப்போதெல்லாம் அரசியல் பிரவேசம் குறித்த சூடு ஏற ஆரம்பித்து விடும்.
அவர் தீவிர அரசியலில் இறங்க வேண்டுமென்பது கடந்த 30 வருடங்களாக அவரது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறை அது குறித்து பேசும் போது ஆண்டவன் தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகி விடுவார்.
அந்த வகையில் கடந்த மூன்று நாட்களாக சென்னையிலுள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினிகாந்த் முதல் நாள் சந்திப்பிலேயே தனது அரசியல் பிரவேசம் குறித்து ஆண்டவர் தான் முடிவெடுக்க வேண்டுமென்று கருத்து தெரிவித்தார்.
அப்புறமென்ன? தமிழகத்தில் மற்ற பிரச்சனைகள் எல்லாம் சூடு ஆறிப்போன நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து விவாதிக்க ஆரம்பித்து விட்டன ஊடகங்கள்.
நடிகர் மாதவன், பா.ஜ.க தலைவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டவர்கள் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிற அதே சமயத்தில் எப்போதுமே குழப்பமாக கருத்து தெரிவிக்கும் ரஜினி அரசியலுக்கு வந்தவுடன் வரும் பிரச்சனைகளை சமாளிப்பதில் திணறுவார், அவர் இந்த மண்ணைச் சேர்ந்தவர் இல்லை, அவருக்கு தமிழக அரசியலில் போதிய அனுபவம் இல்லை என்று எதிர்ப்புக் குரல்களும் வராமல் இல்லை.
இப்படி ஆளாளுக்கு ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தவரும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக எதிர்த்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது ”தென்னிந்தியர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், சினிமா நட்சத்திரங்கள் மீது முட்டாள் தனமான பக்தி வைத்திருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அண்ணாமலை பல்கலை கழகத்தில் படித்த போது, ஒருசமயம் தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து சிவாஜி கணேசன் நடித்த படத்தை பார்க்கச் சென்றேன். அப்போது, படத்தின் துவக்கத்தில் சிவாஜியின் காலை மட்டும் காட்டும் போது, ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.
இப்போது, ஏராளமான தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக உள்ளனர். அவர் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கூட சிலர் கூறுகிறார்கள்.
ஆனால் ரஜினியிடம் என்ன இருக்கிறது? வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார குறைபாடு, விவசாயிகளின் துயரம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அவரிடம் தீர்வுகள் இருக்கின்றனவா? அவரிடம் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். பிறகு ஏன் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்? அமிதாப்பச்சன் போன்று ரஜினிகாந்த் தலையிலும் எதுவும் இல்லை. இவ்வாறு கர்ஜித்திருக்கிறார் மார்க்கண்டேய கட்ஜூ.