‘ராமர் பாலம்’ படத்திற்காக காதலர்கள் சேர்ந்து கட்டிய பாலம்!
கர்ணன் மாரியப்பன் மற்றும் எம்.முருகேசன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராமர் பாலம்’.
சமூக கண்ணோட்டத்துடன் கூடிய காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் புதுமுகங்கள் மது மற்றும் நிகிதா ஜோடியாக நடித்துள்ளனர்.
ராமாயணத்தில் ராமர் சீதையின் மீது கொண்ட காதலால் ராமர் பாலம் உருவானது. அதேபோல தண்ணீர் நிறைந்து ஓடும் ஆற்றங்கரையில் உள்ள இரண்டு ஊர்களுக்கு இடையே பாலம் கட்ட நினைக்கிறார்கள் ஊர்மக்கள். ஆனால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என முறையிட்டும் அது நடக்கவில்லை. ஆனால் ஒரு காதல் காரணமாக அந்த ஊருக்கு பாலம் வருகிறது. அது எப்படி என்பதுதான் இந்தப்படத்தின் கதை.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நீண்டநாளாக இப்படி ஒரு பாலம் கட்டப்பட வேண்டும் என்பது அந்தப்பகுதியில் உள்ள இரண்டு ஊர் மக்களின் விருப்பமாக இருந்ததாம். இந்தப்படம் எடுத்து முடிக்கவும், அங்கே பாலம் கட்டி முடிக்கவும் சரியாக இருந்ததாம்.
விக்ரமனிடம் துணை இயக்குனராக இருந்தவரும் ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்கிற சூப்பர்ஹிட் பாடலை எழுதியவருமான கலைக்குமார் பாடல்களை எழுதியுள்ளார். கம்பம் கர்ணா, கவி பாஸ்கர் ஆகியோரும் இதில் பாடல்களை எழுதியுள்ளனர். கோபால் இசையமைத்துள்ளார். ஆனந்த் சரவணன்-காளிமுத்து இருவரும் ஒளிப்பதிவை கவனிக்க, பி.செல்வமணி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் சென்சார் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், படம் வரும் செப்டம்பரில் திரைக்கு வர இருக்கிறது.