ஹீரோயின் சம்மதம் சொல்லியும் முத்தக் காட்சியில் நடிக்க மறுத்தது ஏன்? – ரகசியத்தை உடைத்த சிபிராஜ்
வாரிசு நடிகர்களில் தன் முயற்சியை கை விடாத ஹீரோக்கள் லிஸ்ட்டில் சத்யராஜின் மகன் சிபிராஜிக்கும் தனி இடமுண்டு.
‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஜாக்சன் துரை’ படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு சிபிராஜ் நடிப்பில் தயாராகியிக்கும் புதிய படம் ‘சத்யா.’
இந்தப்படத்தை தன் மகனுக்காக நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கிறார் நடிகர் சத்யராஜ்.
படத்தில் சிபிராஜ் ஜோடியாக ரம்யா நம்பீஸன் நடிக்க, ஆனந்த்ராஜ், சதீஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை விஜய் ஆண்டனியை வைத்து சைத்தான் படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார்.
டிசம்பர் 8-ம் தேதி ரிலீசாகவிருக்கும் இப்படத்தைப் பற்றி பேசிய சிபிராஜ் ”தெலுங்கில் வெளியான சனம் திரைப்படத்தை நான் முதலில் தியேட்டரில் போய் பார்த்தேன். சனம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னுடைய அம்மாவும், தங்கையும் படத்தை பார்த்தனர் அவர்களுக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் கலந்து பேசி சனம் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கலாம் என்று முடிவு செய்து வாங்கினோம்.
நான் சனம் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளேன் என்பதை ட்விட்டரில் அறிவித்தேன். இதை அறிந்த என் நண்பரான நடிகர் விஜய் ஆண்டனி என்னை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தார். படத்துக்கு டைரக்டர் பிக்ஸ் பண்ணியாச்சா என்று கேட்டார்… இல்லை இன்னும் முடிவு பண்ணவில்லை பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்றேன். அப்போது அவர் நடித்துக்கொண்டிருந்த சைத்தான் திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியை பற்றி என்னிடம் கூறினார்.
அதன் பின் நான் பிரதீப்பை சந்தித்து பேசினேன். நாங்கள் முதல்முறை பேசும் போது படத்தை பற்றி அதிகம் பேசவில்லை. தமிழை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் தான் அதிகம் பேசினோம். பிரதீப் ஏன் படத்தை பற்றி கதையை பற்றி அதிகம் எண்ணிடம் பேசவில்லை என்று அடுத்த நாள் நான் அவரிடம் கேட்டபோது, நான் உங்கள் பாடி லாங்குவேஜை நோட் செய்து கொண்டிருந்தேன். உங்களை படத்தில் எப்படி கையாளுவது என்று எனக்கு தெரிய வேண்டும் அல்லவா என்று கூறினார். படம் ஆரம்பிக்கும் போது என்னை புதுவிதமாக காட்ட வேண்டும் என்று கூறினார். சொன்னது போல என்னை நிஜமாகவே வேறமாதிரி காட்டியுள்ளார்.
படத்தில் என்னோடு ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதவிர சதீஷ் , வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சைமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது. யவன்னா பாடல் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. என்னை மட்டுமல்ல படத்தில் நடித்த அனைவரையும் நன்றாக வேலை வாங்கினார் இயக்குநர் பிரதீப். ரம்யா நம்பீசன் அனுபவம் உள்ள நடிகை அவரை இப்படி தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்கிறாரே என்று நான் யோசிப்பேன். வரலட்சுமி சரத்குமாரிடம் இயக்குநர் இப்படி தான் நடிக்க வேண்டும் என்று கூறியதும் அவரை பார்த்து ”போயா” என்று கிண்டலாக கூறி விட்டார்.
இப்படி சீரியசாகவும், ஜாலியாகவும் சென்றது சத்யாவின் படபிடிப்பு. நீங்கள் கேட்பது போல் படபிடிப்பின் போது லிப் லாக் முத்த காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியது உண்மை தான். அதற்கு காரணம் என்னுடைய மகன் தீரன். அவன் இப்போது சிறுவன், என்னை ரோல் மாடலாக பார்க்கிறான். நான் எதை செய்தாலும் அதை அவன் திரும்ப செய்கிறான். நான் படத்தில் லிப் லாக் காட்சியில் நடிப்பதை பார்த்து. அதே போல் பள்ளிக்கு சென்று செய்து விட்டால் பிரச்சனை நமக்கு தான். அதனால் இப்போது அதை போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன்.
நிச்சயம் எதிர்காலத்தில் லிப் லாக் முத்த காட்சியில் நடிப்பேன். கதை சொல்ல வரும் இயக்குநர்கள் அனைவரும் எனக்காக லிப்லாக் காட்சிகளை கதையிலிருந்து நீக்கி விட வேண்டாம். உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ”சத்யா” படத்தின் டைட்டிலை அவரிடம் கேட்டு முறைப்படி வாங்கி இந்த படத்துக்கு வைத்துள்ளோம். கதையில் கதாநாயகனின் பெயர் ”சத்யா” என்பதால் அதையே படத்தின் தலைப்பாக வைத்து விட்டோம். கேட்ட உடனே இந்த டைட்டிலைக் கொடுத்த கமல் சாருக்கு நன்றி” என்றார் சிபிராஜ்.