தோல்விப்படம் கொடுத்த விக்னேஷ் சிவனுக்கு கார் பரிசா? – சூர்யா மீது கடுப்பான விநியோகஸ்தர்!

வியாபார ரீதியாக தோல்வியடைந்த ஒரு படத்தை ஹிட் படம் என்று சொன்னால் யாருக்குத்தான் கோபம் வராது.
அதுவும் அந்தப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டத்தில் இருக்கும் போது ”ஹிட் படம் கொடுத்து விட்டார்” என்று படத்தின் இயக்குநருக்கு ஹீரோ காரை பரிசாகக் கொடுப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் தானே?
அப்படித்தான் பொங்கலுக்கு ரிலீசான சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் ஹிட் படம் என்றும் அதற்கு காரணமான இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கார் ஒன்றை பரிசாகக் கொடுத்திருப்பது விநியோகஸ்தர் ஒருவருக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை வாங்கிய தமிழக விநியோகஸ்தர்கள் 15 கோடி ரூபாய் நஷ்டமடைந்திருக்கிறார்கள். அந்த உண்மையை மறைத்து விட்டு அந்தப்படம் ஹிட் என்று பில்டப் கொடுப்பது சரியா? என்று கோபத்தோடு கேட்டதோடு எந்தெந்த வகையில் அந்தப்படம் தனக்கு நஷ்டம் என்கிற வரவு செலவு கணக்கையும் வெளியிட்டிருக்கிறார் அப்படத்தால் நஷ்டமடைந்த சேலம் விநியோகஸ்தர் 7ஜி சிவா.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது :
“’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை நம்பி பணம் போட்ட விநியோகஸ்தர்கள் 15 கோடிக்கு மேல் நஷ்டமாகி இருக்காங்க. இதெல்லாம் சூர்யாவுக்கு தெரிஞ்சும் பப்ளிசிட்டிக்காகவும், உண்மையை மக்களிடமிருந்து மூடி மறைப்பதற்காகவும் இயக்குநருக்கு காரை கிப்ட் கொடுத்து தற்புகழ்ச்சி தேடிக்கிறார்.
எல்லா விநியோகஸ்தர்களும் சூர்யாகிட்ட ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஒரு நியாயமான பதிலைக் கேட்க பிளான் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இந்த நேரத்துல விக்னேஷ்சிவனுக்கு காரை பரிசாகக் கொடுக்கிறார் சூர்யா.
படம் ரிலீசாகி இத்தனை நாள் கழிச்சு கார் வாங்கிக் கொடுக்குறீங்களே? இத்தனை நாள் எங்க சார் போனீங்க? நீங்களே சொந்தமா காரை செஞ்சீங்களா? கொஞ்சமாச்சும் நேர்மையோட நடந்துக்கங்க” என்று சூர்யாவை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் 15 கோடி நஷ்டத்தில் எனக்கு 1.5 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் தெரிவித்திருக்கிறார் அந்த விநியோகஸ்தர்.
நஷ்டமானால் அந்த வரவு செலவு கணக்கை வெளியில் சொல்லும் விநியோகஸ்தர்கள் ‘பாகுபலி’, ‘மெர்சல்’ போன்ற உண்மையிலேயே மெகா ஹிட் ஆகும் படங்களால் தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் இப்படி வெளிப்படையாக வெளியிடுவார்களா? என்பதே திரையுலகினரின் எதிர் கேள்வியாக இருக்கிறது.
நியாயமான கேள்வி தான்!
