புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Get real time updates directly on you device, subscribe now.

ASR FILMS சார்பில் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் இன்று வெளியிட்டார்.

பெண்ணை மையப்படுத்தி, சமூகத்தின் மனநிலையை உலுக்கும் ஒரு காத்திரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. வணிக ரீதியிலான சினிமாத்தனம் இன்றி, சமூகத்தின் எதார்த்தமான பக்கங்களை திரையில் பிரதிபலிக்கும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அதன் அடர்த்தியான காட்சியமைப்பிற்காக ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரன், இப்படத்தைத் தயாரித்திருப்பதோடு ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். புதுவையின் பின்னணியில் நடக்கும் கதையாக இது உருவகிக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை, போளூர் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜனனி கதாநாயகியாக நடிக்க, சிங்கம்புலி, மதுமிதா, ரமா, முனார் ரமேஷ், முருகதாஸ், வந்தனா, ஃபெரோஸ் கான், சுகன்யா, கௌசல்யா , சித்தார்த்
என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.

சதீஷ் எஸ். இப்படத்திற்கு இசையமைப்பதோடு பாடல்களையும் எழுதியுள்ளார். தேவசூர்யா கே. ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரஞ்சித் குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் (Post-Production) தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விரைவில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.