பாலா-25 & வணங்கான் இசை வெளியீடு ; கோலாகலமாக நடந்த இருபெரும் விழா!

Get real time updates directly on you device, subscribe now.

1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னை வர்த்தக மையத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முன்னிலையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் இயக்குநர்கள் சீமான், மிஷ்கின், சமுத்திரக்கனி, ஏ.எல். விஜய், லிங்குசாமி, ராம், மணிரத்னம், கே. பாக்கியராஜ், மாரி செல்வராஜ், விக்ரமன், ஆர். வி. உதயகுமார், கே. எஸ். அதியமான், வினோத் (கொட்டுக்காளி), பிருந்தா சாரதி, வசந்த பாலன், சீனுராமசாமி, கஸ்தூரி ராஜா, பேரரசு, பொன்ராம், V.Z. துரை, சிங்கம் புலி, சரண், அரவிந்த் ராஜ், எழில், கோபிநாத் (ஜீவி), பி. எஸ் வினோத் ராஜ், பாரி இளவழகன், ஜி. ஆர். ஆதித்யா, நாகேந்திரன், சுரேஷ், அஜயன் பாலா, கேபிள் சங்கர், அறிவழகன் (ஈரம்), சுசீந்திரன், மீரா கதிரவன், மூர்த்தி, நித்திலன், நம்பிராஜன்,

நடிகர்கள் சிவக்குமார், விஜயகுமார், சூர்யா, சிவகார்த்திகேயன், ஜி. வி பிரகாஷ், கருணாஸ், தம்பி ராமையா, மன்சூரலிகான், வெற்றி, பிரஜின், பிரதீப், சிவாஜி, அரீஷ் குமார், ஆர்.கே சுரேஷ், கூல் சுரேஷ், சூப்பர் குட் சுப்பிரமணி, வீரா, அப்புக்குட்டி, ஏ.எல். உதயா, ஆர். கே.கிரண் ( ஆர்ட் டைரக்டர்),

தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், ஏ.எல். அழகப்பன், தனஞ்செயன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, P L தேனப்பன், சித்ரா லஷ்மண், வெற்றிக்குமரன்,

நடிகைகள் கருத்தம்மா ராஜஸ்ரீ, சாயா தேவி, வரலஷ்மி, காயத்ரி ரகுராம், அபிதா, வேதிகா, ரித்தா, வசுந்தரா, மதுமிதா, பிரிகிடா, ஜுலி, ஸ்வேதா டோரத்தி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related Posts
1 of 13

அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,.

“ஒருமுறைதான் சிவகுமார் சாரை சந்தித்தேன். அவர் ஓர் அற்புதமான மனிதர். நாம் பலரையும் இழந்துவிட்டோம். சிவகுமார் அவர்கள்தான் தமிழ் சினிமாவுக்கே தந்தையாக இருந்துவருகிறார். 25 ஆண்டு விழாவை கொண்டாடவேண்டும் என்று பாலாவிடம் கேட்டேன். நான் என்ன செய்துவிட்டேன். எனக்கு ஏன் விழா எடுக்கிறீர்கள் என்றார். நிச்சயமாக விழா எடுத்தே தீரவேண்டும் என்று அப்போது உறுதியாக நினைத்தேன். சினிமாவில் சாதனை படைத்த பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரையா போன்றவர்களை நாம் பாராட்டவில்லை. இனிமேலாவது நாம் எல்லோருக்கும் விழா எடுத்துப் பாராட்டத் தொடங்கவேண்டும்” என்று சுருக்கமாகப் பேசினார்.

நிகழ்வின் இடையே தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் மணிரத்னம் முன்னிலையில் இயக்குநர் பாலாவுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.

பொன்னாடையுடன் மேடையேற்றி தயாரிப்பாளர்கள் தாணு, தியாகராஜன், கதிரேசன், சிவா, தனஞ்ஜெயன் போன்றவர்கள் பாலாவின் இயக்கத்தைப் பற்றியும் அவரது கடும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிப் பேசினார்கள்.

அடுத்து பாலாவுடன் கதை விவாதங்களில் ஈடுபட்ட பவா செல்லதுரை, சிங்கம்புலி, அஜயன் பாலா, யூகி சேது ஆகியோரை இயக்குநர் மிஷ்கின் சுவாரசியமான கேள்விகளுடன் பேட்டி எடுத்தார்.

விழா தொடங்கிய சில நிமிடங்களில் பரபரப்பாக அரங்கிற்குள் நுழைந்தார்கள் சிவகுமாரும் சூர்யாவும். முதலில் சூர்யா பேச அழைக்கப்பட்டார். அப்போது நடிகர் சிவகுமார், இயக்குநர் பாலாவுக்கு தங்கச் செயினை அணிவித்து மகிழ்ந்தார். இயக்குநர் பாலாவின் மீதான பேரன்பையும், நன்றியையும் தன் பேச்சில் சூர்யா நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார்.