நூறு சதவீதம் வெள்ளை கரன்ஸி : விஜய் படத்துல தாங்க இந்த நேர்மை!

கடந்த ஒரு வாரமாக தூக்கத்தை தொலைத்தவர்களில் சாமானிய மக்களை விட பெரும் பணக்காரர்கள் தான் அதிகம். அந்தளவுக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற பிரதமர் மோடியின் அறிவிப்பு கோடீஸ்வரர்களில் வயிற்றில் புளி, உப்பு, மிளகாய் என எல்லாவற்றையும் கரைத்து கலங்க வைத்து விட்டது.
குறிப்பாக திரைப்படங்களில் 80 சதவீதம் வரை கறுப்புப் பணங்களில் தான் தயாரிக்கப்பட்டு வந்தது. அதிலும் ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் பெரிய பட்ஜெட்டுகள் எல்லாமே பெரும்பாலும் கறுப்பாகத்தான் இருக்கும்.
அந்தளவுக்கு திரையுலகில் கறுப்பு நோட்டுகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு வந்த நிலையில் முதல்முறையாக விஜய் நடித்த பைரவா திரைப்படம் முழுக்க முழுக்க வெள்ளை நோட்டுகளால் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்கிற செய்தி தான் கோடம்பாக்கத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
பரதன் இயக்கும் இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நாங்கள் வெள்ளையில் தான் படத்தை தயாரித்து வருகிறோம் என்பதை சொல்லும் விதமாக படத்தின் மொத்த செலவையும் செக், டிடிகளை பயன்படுத்தி வங்கிக் கணக்குகள் வழியாகவே படப்பிடிப்புச் செலவுகளை செய்திருக்கிறார்களாம்.
500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ததால் பல தயாரிப்பாளர்கள் பெருங்கலக்கத்தில் இருக்க, பைரவா தயாரிப்பாளர் மட்டும் நிம்மதியாக இருக்கிறாராம்.
பைரவா தயாரிப்பாளரைப் போலவே அப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமையை வாங்கியிருக்கும் ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் சரவணனும் அதே வெள்ளை நோட்டுகளில் தான் படத்தை வாங்கியிருக்கிறார் என்பது எக்ஸ்ட்ரா செய்தி.
நேர்மைக்கு கிடைக்கும் பரிசு வெற்றி தானே..?