விசால மனசுக்காரர் விஷால்! : படப்பிடிப்பிலும் தொடருது உதவி

நடிகர் சங்கத்தில் பொறுப்புக்கு வந்த பிறகு தர்ம பிரபுவாக விஷாலை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் ரசிகர்களும், பொதுமக்களும்!
தான் நடிக்கின்ற படத்தின் படப்பிடிப்புத் தளங்களில் யாராவது ஏதேனும் உதவி என்று வந்தால் தன்னால் இயன்ற அளவுக்கு அவர்களுக்கு உதவி செய்வதை சமீபகாலமாக அதிகரித்திருக்கிறார் விஷால். பொதுமக்கள் கலந்து கொள்கிற பலவித பொது நிகழ்ச்சிகளிலும் விஷாலின் இந்த சேவை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அப்படித்தான் சென்னை கோடம்பாக்கத்திலும் படப்பிடிப்புக்கு போன இடத்தில் அப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் செய்வதற்கு வழக்கம் போல உதவியிருக்கிறார்.
மிஸ்கின் டைரக்ஷனில் விஷால் நடித்து வரும் ‘துப்பறிவாளன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் ஹவுசிங் போர்டில் நடைபெற்றது.
படப்பிடிப்பின் போது அங்கு வந்த புலியூர் ஹவுசிங் போர்டு சங்கத்தினர் நடிகர் விஷால் அவர்களிடம் தங்கள் பகுதியில் பழுதடைந்து இருக்கும் பாதாள சாக்கடை, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றை சரி செய்ய அடிப்படை தேவைகளை வழங்குமாறு முறையிட்டனர்.
உடனே அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்த விஷால் அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வதற்கு உதவிகளை வழங்கியிருக்கிறார்.
விஷாலின் விசாலமான மனசைக் கண்டு சந்தோஷப்பட்ட புலியூர் ஹவுசிங் போர்டு பகுதி மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.