சும்மா விட மாட்டேன்… : ‘திருட்டு விசிடி’ கும்பலுக்கு விஷால் எச்சரிக்கை
‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் முத்தையாவின் அடுத்த படம் ‘மருது’.
கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக விஷால், கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால் தனது மருது படத்துக்கு திருட்டி விசிடி வந்தால் அதை எடுத்த கும்பலை விடவே மாட்டேன் என்று பகிரங்கமாக எச்சரித்தார்.
தமிழில் வரும் மருது தெலுங்கில் ராயுடு என்ற பெயரில்மே 20ம் தேதி ரிலீசாகிறது. நான் நடித்த சண்டைக்கோழி படம் இன்றும் திருவிழா சமயங்களில் கிராமங்களில் திரையிடுவதாக விநியோகஸ்தர்கள் சொல்லுவார்கள். அதே போல இந்த ‘மருது’ படம் என்னை நகரம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொண்டு சேர்க்கும். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை எனக்கு இந்தப் படத்தில் இயக்குநர் தந்திருக்கிறார்.
‘அவன் இவன்’ படத்திற்குப் பிறகு நான் என்னை முழுமையாக அர்ப்பணித்த படம். ஒரு காமெடியனாக எல்லாருக்கும் நன்கு தெரிந்த சூரி இந்தப்படம் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் வலம் வருவார். வில்லனாக நடித்துள்ள ஆர்.கே சுரேஷ், வெறித்தனமாக நடித்துள்ளார். நாங்கள் இருவரும் நடித்துள்ள கிளைமாக்ஸ் காட்சியில் அவருடைய நடிப்பு சிறப்பானதாக பேசப்படும்.
திருட்டு விசிடியை தடுக்க நான் ஒருவன் தான் இன்றுவரை தனியாளாக போராடிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய படத்திற்காக மட்டுமல்ல, எல்லா நடிகர்களுக்காகவும் தான் நான் பேசுகிறேன். சூர்யாவின் 24 படத்துக்கு திருட்டு விசிடி வந்து விட்டது. ஆனால் யாரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
என்னுடைய மருது திரைப்படம் மே 20 ஆம் தேதி வெளியாகிறது. கண்டிப்பாக அதற்கும் திருட்டு விசிடி வெளியிட தயாராகியிருப்பார்கள். அந்த நேரத்தில் நான் நிச்சயமாக என் நண்பர்களுடன் களமிறங்குவேன். திருட்டு விசிடிகளை கண்டுபிடித்தால் நிச்சயமாக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டு தக்க நடவடிக்கை எடுப்பேன். ஒருவேளை அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் என்ன செய்வேன் என்பதை பிறகு உங்களை கூப்பிட்டுச் சொல்கிறேன் என்றார்.