ஆக்ஷன் படம் மாதிரி இருக்கும், ஆனா..? : ’10 எண்றதுக்குள்ள’ சீக்ரெட் சொன்ன விக்ரம்

‘ஐ’ படத்துக்கு விக்ரம் கொட்டிய உழைப்பு அளவிட முடியாதது. அவருடைய அந்த அர்ப்பணிப்புக்கு இன்னொரு ஹீரோவாக இருந்தால் இரண்டு வருடங்கள் ஓய்வெடுத்து விட்டுத்தான் அடுத்த படத்தையே கமிட் செய்திருப்பார்.
ஆனால் விக்ரம் அப்படியில்லை. ‘ஐ’ ரிலீசான கையோடு விஜய் மில்டன் இயக்கத்தில் ’10 எண்றதுக்குள்ள’ படத்துக்கு கால்ஷூட் கொடுத்து விட்டார்.
இதெல்லாம் ஒரே வாரத்துல நடந்த விஷயங்கள் என்றபடியே பேச ஆரம்பித்தார் இயக்குநர் விஜய் மில்டன்.
இந்த வாய்ப்பு கெடைச்சதுக்கு ‘கோலிசோடா’ படத்துக்குத்தான் நன்றி சொல்லணும். அந்தப்படம் ரிலீசான உடனே ஒருநாள் லேட் நைட்ல போன் பண்ணி பாராட்டினார் விக்ரம் சார். அப்போ தான் ஏதாவது கதை வெச்சிருக்கீங்களா? சேர்ந்து படம் பண்ணுவோம்னு கேட்டார்.
ஒரு டிரைவர் கதை இருக்கு சார்ன்னு சொன்னேன். அப்போ உடனே வாங்களேன்ன்னு கூப்பிட்டார். சார் இப்போ லேட் நைட் ஆயிடுச்சு. காலையில வர்றேன்னு சொன்னேன். மறுநாள் மீட் பண்ணி கதை சொன்னேன். கேட்ட உடனே பிடிச்சுப் போச்சு. அதே கதையை ஏ.ஆர்.முருகதாஸ் சார்கிட்டேயும் சொல்லியிருந்தேன். அப்புறம் ரெண்டு பேரையும் நேர்ல மீட் பண்ணி அடுத்த நாலைஞ்சு நாட்கள்ல இந்த படம் ஆரம்பிச்சது.
இந்தப் படத்தோட போஸ்டர்ஸ், டீஸர் இதையெல்லாம் பார்த்தால் ஏதோ ஆக்ஷன் படம் மாதிரி தெரியும் ஆனா இது ஒரு பக்காவான லவ் ஸ்டோரி. சென்னையில இருந்து உத்ரகாண்ட் வரைக்கும் விக்ரமுக்கும், சமந்தாவுக்கும் உள்ள ட்ராவல் தான் இந்தப்படத்தோட கதை. கேரக்டருக்காக விக்ரம் சார் செய்ற விஷயங்கள் எல்லாம் உண்மையிலேயே வியப்பா இருக்கும். இந்தப்படத்துல அவரோட அர்ப்பணிப்பு பெரிய விஷயம் என்றார்.
பின்னர் பேசிய விக்ரம் “ விஜய் மில்டன் சார்கிட்ட கதை கேட்டா அப்படி ஈர்க்கும்படி சொல்லுவார். ஒரு டெக்னிஷியனா அவர் பெரிய சாதனையாளர். இந்தப்படத்தோட கதை எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. படத்துல அவர் சின்ன சின்ன விஷயத்துலேயும் இன்னைக்கு வரைக்கும் கரெக்ஷன் போடுறார். கேட்டா படம் இன்னும் பெட்டரா வரும்ல சார்ன்னு சொல்லுவார். அந்தளவுக்கு படத்துல அவர் முழு ஈடுபாட்டோட ஒர்க் பண்ணிருக்கார்.
படத்துல குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் எனக்கும் சமந்தாவுக்கும் உள்ள லவ் போர்ஷன் தான். எனக்கும், அவங்களுக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனா ரெண்டு பேர்க்குள்ளேயும் ஒரு சின்ன லவ் ஓடிக்கிட்டிருக்கும். ட்ராவல்ல ஒண்ணா இருப்போம். ஆனா லவ்வை சொல்லிக்கவே மாட்டோம். சமந்தா பார்க்கத்தான் சின்னப் பொண்ணு மாதிரி இருப்பார். ஆனா எல்லா உலக விஷயங்கள் எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சிருக்கார். அதி புத்திசாலியும் கூட என்றவர் விஜய் மில்டனைப் பார்த்து சார் நான் உங்களைத்தான் இந்தப்படத்துல முழுமையா நம்பியிருக்கேன் என்றார் சிரித்துக்கொண்டே…
நம்பிக்கையை காப்பாத்திடுங்க விஜய் மில்டன்!