பிறந்தநாளில் புதிய படத்தை அறிவித்த கௌதம் கார்த்திக்!

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் நமக்கு கதாநாயகனாக அறிமுகமான கௌதம் கார்த்திக், தொடர்ந்து தமிழில் பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பத்து தல’ மற்றும் ‘ஆகஸ்ட் 16, 1947’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது.
தற்போது கௌதம் கார்த்திக் ‘கிரிமினல்’ மற்றும் ‘மிஸ்டர் எக்ஸ்’ என இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில், இப்போது இவர் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இப்புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். எளிய மக்களின் வாழ்வியலையும் அதிகாரத்திற்கு எதிரான அரசியலையும் அழுத்தமாக பதிவு செய்யும் இயக்குநர் ராஜு முருகன் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தினா ராகவன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
தற்போதைக்கு GK 19 என்ற பெயரில் துவங்கியுள்ள இந்த படத்தை எம்.ஜி.ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.பி.வி. மாறன்
மற்றும் டாடா இயக்குநர் கணேஷ் கே பாபு இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். மேலும் விரைவில் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.