சம்பளம் தராமல் ஏமாற்றுகிறார்கள் – தனுஷ் பரபரப்பு புகார்
‘வட சென்னை’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் தயாராகி வரும் படம் அசுரன்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மஞ்சு வாரியார் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தனுஷ் பேசியதாவது, ”அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது.
வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்த கதாபாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பினை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா? என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக இருக்கும். மிகவும் மகிழ்ச்சியுடன் நான் நடித்த படம் இது.
வெற்றிமாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்பார்ம் கொடுத்திருக்காங்க. மஞ்சுவாரியாரின் டேலண்ட் எனக்குப் பிடிக்கும். அவரோடு நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது. கென்னுக்கு கான்பிடண்ட் அதிகம். டி.ஜே பாடியே நம்மை கரெக்ட் பண்ணிருவான். இப்ப இருக்குற இளைஞர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. ஜிவி, அவரோடு வொர்க் பண்றது ஜாலியா இருக்கும். மண் சார்ந்த இசை இப்படத்திற்கு கொடுத்திருக்கிறார். வடசென்னை தான் வெற்றிமாறனின் பெஸ்ட் என்று நினைத்தேன். ஆனால் அசுரன் தான் அவரின் பெஸ்ட்டாக இருக்கும்.
மக்கள் தான் வடசென்னைக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். அதுதான் பெரியது. விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது.
இந்த காலத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அது பெரிய வேலையாக இருக்கிறது. பல தயாரிப்பாளர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள். ஏமாற்றிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே தாணு முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டார். எனவே என்றைக்குமே அவருக்கு நன்றியோடு இருப்பேன். படம் திரைக்கு வந்து பல அதிசயங்களை செய்யும்.” என்றார்.