பாகுபலி – விமர்சனம்
ஆயிரக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவியுடன் கிட்டத்தட்ட இரண்டு வருட உழைப்பில் எஸ்.எஸ்.ராஜமெளலியின் கனவுப் படைப்பாக தயாராகியிருக்கிறது ‘பாகுபலி’.
வீரர்கள் கொலை செய்ய துரத்த, ஒரு கைக்குழந்தையுடன் ஒரு அருவி கொட்டும் மலையடிவாரத்தில் ஓடி வருகிறார் ரம்யாகிருஷ்ணன். அந்த முதல் காட்சியிலேயே பிரம்மாண்டமும் லாஜிக் மிஸ்ஸாக ஆரம்பித்து விடுகிறது. வீரர்கள் நெருங்க அவர்களை சாதுர்யமாக வெட்டிச் சாய்த்து விட்டு குழந்தையை காப்பாற்ற ஆற்றில் இறங்குகிறார். ”இந்தக் குழந்தை மகிழ்மதியை ஆள வேண்டும். அதனால் எப்படியாவது இந்தக் குழந்தையை காப்பாற்றி விடு” என்று சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டு ஒரு கையால் குழந்தையை தூக்கிப் பிடித்தபடி வெள்ளத்தில் மூழ்கி இறந்து போகிறார்.
அதன்பிறகு அங்கு வசிக்கும் மலைவாழ் பெண்ணான ரோகிணி அந்தக் குழந்தையை தன் குழந்தையாக எடுத்து வளர்க்கிறாள். அவர் தான் ஹீரோ பிரபாஸ். அவர் சிறு வயதிலிருந்தே அந்த மலை அருவி தன்னை அழைப்பது போல, அதன் மீது ஆர்வமாகவே இருக்கிறார். அந்த மலை அருவிக்கு மேலே என்ன இருக்கிறது? என்பதைப் பார்த்தே ஆக வேண்டும் என்கிற ஆவல் சிறுவயதிலிருந்தே அவருக்கு இருக்கிறது. ஆனால் அவரின் அந்த மலையருவி ஆசை ரோகிணிக்கு பதட்டத்தை தருகிறது. அதனால் அவன் அங்கு போகவே கூடாது என்று சிவனுக்கு பூஜை செய்கிறார். ஆயிரத்து ஒரு முறை தண்ணீர் எடுத்து சிவலிங்கத்தின் மீது ஊற்றி அவர் மனதை குளிர்வித்தால் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று ஒரு சாமியார் சொல்கிறார்.
அம்மாவுக்கு பதில் அந்த லிங்கத்தையே தோளில் சுமந்து கொண்டு மலையருவியின் அடிப்பகுதியில் வைத்து இனிமேல் எப்போதுமே அவர் மனசு குளிரும் என்று அம்மாவின் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்.
ஆனாலும் பிரபாஸ் தனது அடுத்தடுத்த முயற்சிகளால் அந்த மலையருவி மீது ஏறி விடுகிறார். அங்கே வரும் தமன்னாவின் அழகில் மயங்கி அவரை காதல் கொள்கிறார். தமன்னாவோ தனக்கு தங்கள் நாட்டு இளவரசியான அனுஷ்காவை மீட்டுவரும் லட்சியம் இருப்பதாகச் சொல்கிறாள். அந்த லட்சியத்தை தன் லட்சியமாக ஏற்கும் பிரபாஸ் அனுஷ்காவை மீட்கும் வேலையில் இறங்குகிறார்.
மகிழ்மதி என்கிற அரச சாம்ராஜ்யம் நடக்கும் நாட்டுக்கு போகிறான். முதல் தடவையாக அந்த நாட்டுக்குப் பிரபாஸ் போகவும் அவரை எல்லோரும் பாகுபலி பாகுபலி என்று அழைக்கிறார்கள். அந்த பேரைக் கேட்டதும் பிரபாஸே ஆச்சரியமடைகிறார். அங்கு அரசனாக இருக்கும் ராணாவின் பாதுகாப்பையும் மீறி இளவரசி அனுஷ்காவை மீட்டு வரும் வழியில் அதே அரசவையில் அடிமையாக இருக்கும் சத்யராஜ் மூலம் பிரபாஸ் பாகுபலி அழைப்பதன் பின்னணி விபரங்கள் ப்ளாஸ்பேக் காட்சிகளாக விரிகிறது.
அதன்பிறகு அந்த மகிழ்மதியின் பின்னணி என்ன? ராணா அங்கு எப்படி அரசரானார்? பிரபாஸை ஏன் எல்லோரும் பாகுபலி என்று அழைக்கிறார்கள்? என்கிற கேள்விகளுக்கு விடையாக அமைகிறது மீதிக்கதை.
ஹீரோவாக வரும் பிரபாஸ் நம்பவே முடியாத பல காட்சிகளில் லாஜிக்கே இல்லாமல் அசரடிக்கிறார். பெரிய சைஸ் சிவலிங்கத்தை அசால்ட்டாக தூக்கி தோளி வைக்கிறார். அவ்வளவு பெரிய மலையருவியை அசால்ட்டாக ஏறுகிறார். ஒரு காட்சியில் அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தும் கூட ஒரு சின்ன காயம் கூட வராமல் கம்பீரமாக நடந்து வருகிறார். இரவு முழுக்க தண்ணீருக்கு அடியில் இருந்து கொண்டு தமன்னாவின் கையில் டாட்டூ வரைகிறார். விழப்போகும் ராணாவின் பிரம்மாண்டச் சிலையை தனி ஆளாக தடுத்து நிறுத்துகிறார்.
இவர் இப்படி என்றால் ராணா ஒரு காட்டெருமையை நெத்தியாலேயே முட்டி மோதி வீழ்த்துகிறார். இப்படி பல ஆச்சரியங்களை காட்சிப்படுத்தி பிரம்மிக்க வைக்கிறார் இயக்குநர் ராஜமெளலி.
இன்னொரு ஹீரோவாக வரும் ராணாவுக்கு காதல் காட்சிகள் மட்டும் தான் இல்லை. மற்றபடி பிரபாஸுக்கு நிகரான கேரக்டர் தான் அவருடையதும். நல்லவேளையாக இரண்டு ஹீரோக்கள் மோதிக்கொள்ளும் காட்சிகளை தவிர்த்தது.
அனுஷ்கா, தமன்னா என்று இரண்டு லட்டு மாதிரியான ஹீரோயின்களில் அதிக முக்கியத்துவம் தமன்னாவுக்குத்தான் கொடுத்திருக்கிறார்கள். அனுஷ்காவை ஒரு அடிமையாக மட்டுமே கடைசிவரை காட்டி விட்டு அவரது ரசிகர்களை பெருத்த அளவில் ஏமாற்றியிருக்கிறார்கள். இரண்டாவது பாகத்தில் தான் அவர் அழகாகத் தெரிவார் போலிருக்கிறது.
ஒரு பெண் போராளியாக வரும் தமன்னா அதற்கேற்ற சுறுசுறுப்புடனும், வேகத்துடனும் நடித்திருக்கிறார். நடிப்பில் அப்படி என்றால் பிரபாஸ் உடனான காதல் காட்சிகளை ஒரு அழகான ஓவியம் போல தீட்டி அசரடிக்கிறார் இயக்குநர் ராஜமெளலி. தமன்னா அசந்திருந்த நேரங்கள் பார்த்து அவரது உடம்புகளில் டாட்டூவை வரைந்து விட்டுப் போவதெல்லாம் இலக்கிய நயம் மிகுந்த காட்சிகள்.
ரம்யாகிருஷ்ணனின் அண்ணனாக வரும் நாசர் ஒரு கை சூம்பிப் போய் உடல் குறையுடன் வந்தாலும் நடிப்பில் அதே முதிர்ச்சி காட்டுகிறார்.
மரகதமணியின் இசையில் பாடல்கள் மனதைத் தொடவில்லை என்றாலும் பின்னணி இசை பிரம்மாண்டப் படத்துக்கே உரியதாய் செவிகளை மிரட்டுகிறது.
படத்தில் பாராட்டியே தீரவேண்டிய இரண்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார். ஆர்ட் டைரக்டர் சாபு சிரில். மலையருவியில் நடந்து போகும் போது தெறிக்கும் சிறிய நீர்த்துளியைக் கூட பிரம்மாண்டப்படுத்தி காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார்.
எது கிராபிக்ஸ், சிஜி ஒர்க், விஷுவல் எபெக்ட் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மகிழ்மதி அரசின் பிரம்மாண்டத்தைக் நேர்த்தியான செட்டுகளை போட்டிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் சாபு சிரில். அதேபோல படத்தின் வரும் கதாபாத்திரங்களின் ஆடை, அணிகலன்களிலும் மெனக்கிட்டிருக்கிறார் ஆடை வடிவமைப்பாளர் ரமா சாந்தி.
இந்த மூவருமே படத்தில் அதிக உழைப்பைப் கொட்டி விருதுகளை அள்ளத் தகுதியானவர்கள் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
மதன் கார்க்கி பாடல்கள் எழுதுவதோடு தன் வேலையை நிறுத்தியிருக்கலாம். நீ பெண் நான் ஆண் நாம் காதலிக்கிறோம் என்கிற டெப்த் இல்லாத வசனமெல்லாம் இப்படி ஒரு பிரம்மாண்டப் படத்துக்கு இழுக்கு தானே..?
‘பாகுபலி’ என்றால் தமிழில் ‘பலம் பொருந்தியவன்’ என்று பொருள். படத்தின் ஹீரோ அப்படித்தான் பல காட்சிகளில் அவருடைய பலத்தை நிரூபிக்கிறார். ஆனால் எல்லாமே இம்மியளவுக்கும் லாஜிக் இல்லாத ஓட்டைகளாக இருக்கிறது. அப்போதே தெரிகிறது இது அக்மார்க் தெலுங்குப் படத்தின் வரிசை என்று.
ஒரு பிரம்மாண்டப் படத்தை எடுக்கப் போகிறேன் என்று ஒரு இயக்குநர் அறிவித்தால் அது எந்த மாதிரியான கதையாக இருக்கும் என்பதை பிறந்த குழந்தை கூட யூகித்து விடலாம் போலிருக்கிறது. ஆமாம், சரித்திரக் கதை, புராணக்கதைகளை தேர்ந்தெடுத்து படமாக்குவது தான் பிரம்மாண்டம் போலிருக்கிறது. ஏனென்றால் அதில் தானே குண்டூசி முதல் பிரமாண்டமான செட்டுகள் வரை எல்லாவற்றையும் பெருசு பெருசாக காட்ட முடியும். இதுதான் பிரமாண்டத்தின் எல்லை போலிருக்கிறது.
‘பாகுபலி’யும் ஒரு சரித்திரப் பின்னணி கொண்ட கதை தான். ஆனால் அரசக் கதைகள் என்றாலே நயவஞ்சகம் முக்கியமாக இருக்குமே இந்தப்படமும் அப்படி வழி வரும் கதைதான்.
இரண்டு பாகமாக எடுக்க திட்டமிட்டதாலோ என்னவோ முதல் பாகத்தில் அனுஷ்காவுக்கான முக்கியத்துவத்தை முழுவதுமாக குறைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. போஸ்டர்களில் அவருடைய புகைப்படத்தைப் பார்த்து ஆவலோடு வரும் ரசிகர்கள் நிச்சயம் ஏமாந்து தான் போவார்கள்.
லாஜிக் இல்லாத காட்சிகள், மசாலா படத்துக்குரிய குத்து சாங், பார்த்தவுடன் தெலுங்கு வாடையடிக்கும் நடிகர், நடிகைகள் பிரம்மாண்டம் என்றாலே அதை சரித்திரக் கதைகளின் மட்டுமே காட்சிப்படுத்த முடியும் என்கிற வழக்கமான ஃபார்முலா இவைகளை தவிர்த்திருந்தால் ஹாலிவுட் படத்துக்கு நிகரான என்று சொல்லை விட, அவர்களையும் மிஞ்ச நம்ம ஊர்ல இருந்து ஒரு ஆள் இருக்கார் என்று பெருமையோடு சொல்லலாம்.