கனவு பலித்தது- ஸ்ரீநிதி ஷெட்டி!

இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.இதற்காக சென்னை வி. ஆர். வணிக வளாகத்திலுள்ள பி விஆர் திரையரங்கத்தில் ‘கோப்ரா’ முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது- இதில் படத்தின் நாயகன் சீயான் விக்ரம், நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகைகளான மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் மிருணாளினி ரவி, நடிகர் துருவ் விக்ரம், குழந்தை நட்சத்திரம் ரனீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவினில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பேசுகையில்,
சீயான் விக்ரம் சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய கனவுகளில் ஒன்று. அது இந்த ‘கோப்ரா’ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இதற்காக இயக்குநர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் என்னை இயல்பாக இருக்க வைத்து, படப்பிடிப்பு முழுவதையும் உற்சாகமாக பணியாற்ற வைத்ததில் விக்ரம் சாரின் ஒத்துழைப்பு மறக்க இயலாது. தமிழில் முதன் முதலாக அறிமுகமாகும் இந்த படத்தில் உடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் கோப்ரா திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ஆதரவளிக்க வேண்டும்.’: என்றார்.
#Cobra #கோப்ரா