பரவை முனியம்மாவுக்கு 5 லட்சம்! : தனுஷுக்கு தங்கமான மனசு
சினிமாவில் யார் எந்த நேரத்தில் எந்த மனநிலையில் உதவி செய்வார்கள் என்பதே தெரியாது. அப்படி உதவி செய்தாலும் அது காலத்தே செய்வது தான் சிறந்தது.
அப்படி ஒரு உதவியைத் தான் செய்திருக்கிறார் நடிகர் தனுஷ்.
விக்ரமின் ‘தூள்’ படத்தில் ‘ஏ சிங்கம் போல…’ என்கிற கணீர் குரலை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். அந்த கிராமத்து பெருங்குரலான நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா சமீபகாலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் படுத்த படுக்கையாகி விட்டார்.
சொந்த பந்தங்களே உதவிக்கு இல்லாத நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஷால் மருந்து மாத்திரை உள்ளிட்ட செலவுகளுக்கு மாதம் தோறும் 5 ஆயிரம் தர முன் வந்தார்.
அடுத்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் 25 ஆயிரத்தை கொடுத்து உதவினார். இந்த இரண்டு பேருக்குமே பெருமை சேர்க்கும் விதத்தில் நேற்று நடிகர் தனுஷ் தன் சார்பில் 5 லட்சம் ரூபாயை கொடுத்து பேருதவி செய்திருக்கிறார்.
எல்லாவற்றுக்குள் தேவை தாரள மனசு. அது தனுஷ் கிட்ட இருக்கு. பரவைக்கு இது நல்ல காலம்!