நல்ல படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை! – ‘மேற்கு தொடர்ச்சி மலை’ இயக்குனர் வேதனை
இந்த வார வெளியீட்டில் விமர்சகர்கள், சமூக ஆர்வலர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்று கொண்டாடப்பட்டு வரும் படம் மேற்கு தொடர்ச்சி மலை.
விஜய் சேதுபதி தயாரிப்பில் லெனின் பாரதி இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் தயாரான இப்படம் தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் வாழ்கிற உழைக்கும் மக்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி யதார்த்தமாக பந்தி வைத்திருக்கிறது.
முன்னதாக இந்தப்படம் குறித்து ஊடகங்கள், சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவியதும் ரசிகர்கள் படத்தைப் பார்க்க தியேட்டர்களுக்கு படையெடுத்தார்கள். ஆனால் பெரும்பாலான தியேட்டர்களில் இந்தப்படம் ரிலீசாகவில்லை. அதற்கு காரணம் கூடவே வந்த சில படங்கள் அதிக தியேட்டர்களை ஆக்கிரமித்து அக்கிரமம் செய்தது தான்.
இருந்தாலும் நல்லவை நாலு கிலோ மீட்டர் தள்ளி இருந்தாலும் தேடிப்போவது போல இந்தப்படம் ஓடுகிற தியேட்டர்களைத் தேடிச்சென்று படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள் ரசிகர்கள்.
இப்படி மெல்ல மெல்ல மேற்கு தொடர்ச்சி மலை படத்துக்கு ரசிகர்களிடம் பெருகும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
படத்தைப் போலவே மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, கண்ணீர் என கலந்து கட்டிய சந்திப்பில் பேசிய இயக்குனர் லெனின் பாரதி “இந்தப் படம் ரிலீசாவதற்கு முன்பு வரை அதன் ஹார்ட் டிஸ்க்கை என்னுடைய தோள் பையில் சுமந்து கொண்டே போவேன், எங்கு சென்றாலும் அது என் கூடவே சுமந்தேன். ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு அந்த தோள் பையை நீங்கள் சுமக்க ஆரம்பித்து மக்களிடம் கொண்டு சென்றீர்கள். அதற்கு மிகப்பெரிய நன்றி.
இந்தப் படத்துக்கு எல்லா தரப்பு மக்களும் ஆதரவு தருகிறார்கள். படம் எங்கே ஓடுகிறது என்று தேடிச்சென்று தியேட்டர்களில் படத்தை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனாலும் இப்படி ஒரு நல்ல படம் என்று நீங்களும், ரசிகர்களும் கொண்டாடும் படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை” என்று வேதனையோடு தெரிவித்தவர் இந்த நிலை எதிர்காலத்தில் மாறும் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார்.
பின்னர் பேசிய தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் சேதுபதி ”இந்தப் படத்தை லெனின் பாரதி என்ற நல்ல மனிதருக்காக தயாரித்தேன்.
சத்தியமாகச் சொல்கிறேன். இந்தப்படம் தயாரான உடன் நான் பார்த்த போது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் எனக்குப் பிடிக்காத இந்தப் படத்தை நீங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறீர்கள். அப்போது தான் எந்த மாதிரியான படங்களை நீங்கள் ரசிக்கிறீர்கள்? என்னுடைய ரசனை எப்படி இருக்கிறது? என்பதை புரிந்து கொண்டேன். எப்படிப்பட்ட படங்களை ரசிக்க வேண்டும் என்று உங்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
இந்தப்படம் ரிலீசானால் போதும் என்கிற நிலையில் படத்தின் வசூலில் வருகிற அத்தனை பணத்தையும் படத்தின் புரமோஷன்களுக்கே செலவிட சொல்லி விட்டேன். இப்படி ஒரு நல்ல படத்தை தயாரித்த பெருமை எனக்குப் போதும்” என்றார்.