இறுதி எச்சரிக்கை: என் பெயரில் வெளியிடப்படும் போலிச் செய்திகள் – தங்கர் பச்சான்

Get real time updates directly on you device, subscribe now.


அண்மை காலமாகவும் கடந்த காலங்களிலும் என் உருவ படங்களை பயன்படுத்தியும், என் பெயரை பயன்படுத்தியும் போலிச் செய்திகள் உலவுகின்றன. இன்று கூட ” சாத்தான் குளம் இரட்டைக் கொலை” குறித்த என் பெயரில் உலவும் செய்தி ஒன்றினை நண்பர் அனுப்பி வைத்திருந்தார். இன்றுவரை இக்கொலைகள் குறித்த எந்த கருத்தையும் நான் தெரிவிக்காத நிலையில் இப்படிப்பட்ட ஒரு செய்தியை வெளியிட்டவர் தண்டனைக்கு உள்ளாவார்.

இணைய கூலிகள் அதிகரித்துள்ள இவ்வேளையில் இதுபோன்ற செய்திகளை இனிமேலும் கண்டுகொள்ளாமல் இருந்தால் என் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என உணர்ந்தபடியால் இந்த இறுதி எச்சரிக்கையை விடுக்கின்றேன்.

நான் பேசினாலும், எழுதினாலும், அறிக்கை விடுத்தாலும் எனது கைப்பேசி எண்களிலிருந்து இயங்கும் WhatsApp, எனது Twitter, Facebook இவைகளில் மட்டுமே அச்செய்திகள் வெளிவரும். இவைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமே அச்சு ஊடகங்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் தரப்படும். எனவே எனது கணக்கில் இயங்கும் இவைகளில் வெளியாகும் செய்திகள் மட்டுமே என்னுடையவை.

இனி என்னுடைய பெயரில் எந்த செய்திகள் வெளிவந்தாலும் அதை வெளிப்படுத்துபவர்கள் மேல் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இறுதி எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கர் பச்சான்
திரைப்பட இயக்குநர்
சென்னை- 600030
11.07.2020