நம்பி வந்த இளம் இயக்குனரை நட்டாற்றில் விட்ட கெளதம் மேனன்! – குற்றம் நடந்தது என்ன?

Get real time updates directly on you device, subscribe now.

யக்கிய முதல் படத்திலேயே ”அடடே. இந்த சின்ன வயசுல இவ்வளவு திறமையா..” என்று திரையுலகத்தையும், ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் ‘துருவங்கள் 16’ பட இயக்குனர் கார்த்திக் நரேன்.

அந்தப் படம் வெற்றி பெற்றதும் கோலிவுட்டின் பிரபலங்களிடமிருந்து பாராட்டுகள் குவிய, அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தது.

ஆனால் தனக்குப் பிடித்த அதாவது ”யாருடைய படங்களைப் பார்த்து வியந்து தானும் இயக்குனராக வேண்டும் என்று நினைத்தாரோ?” அதே கெளதம் மேனன் கம்பெனியிலேயே இரண்டாவது படத்தை இயக்குகிற வாய்ப்பு கிடைத்தால் அதை சும்மா விட முடியுமா?

உடனே கெளதம் மேனன் தயாரிப்பு நிறுவனத்தில் தனது ‘நரகாசுரன்’ படத்தை இயக்க ஓ.கே சொன்னார் கார்த்திக் நரேன்.

அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா நடிப்பில் தயாராகி வந்த இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் ரிலீசாகவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கார்த்திக் நரேன் ‘நாடக மேடை’ என்ற படத்தை சமீபத்தில் தனது சொந்த பேனரில் ஆரம்பித்தார்.

இப்படிப்பட்ட சூழலில் தான் “பலருடைய எதிர்ப்புகளைத் தாண்டி உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களோடு இணைந்து படத்தை இயக்கினேன். கடைசியில் எங்களைக் குப்பையாக மதித்து, சொந்தமாக முதலீடு செய்து படத்தைத் தயாரிக்கும்படி செய்து விட்டீர்கள். பிரச்னையிலிருந்து ஓடி ஒளியாமல் புலம்பியபடி எதிர்கொள்வது மேலானது. இனியும் இது போன்ற மோசமான செயலை இன்னொரு இளம் இயக்குநருக்கு செய்து விடாதீர்கள். நீங்கள் செய்தது வேதனையைத் தருகிறது” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார் கார்த்திக் நரேன்.

Related Posts
1 of 5

பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படத்தில் கெளதம் மேனனுடன் பத்ரி கஸ்தூரி என்ற தயாரிப்பாளரும் இணைந்து கொண்டார். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான இவர் ‘ஜருகண்டி’ இன்னொரு பக்கம் என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் ஏற்கனவே கெளதம் மேனன் தயாரித்து பாதியில் நிற்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களுக்கும் பல கோடிகளை பைனான்ஸாக கொடுத்திருக்கிறார்.

‘நரகாசுரன்’ படத்தை ஆரம்பித்து விட்டுப் போன கெளதம் மேனன் அதன்பிறகு அந்தப் பக்கம் திரும்பியே பார்க்கவில்லையாம், படப்பிடிப்பு நடத்த பணமும் கொடுத்ததில்லையாம். இதனால் தடுமாறிய கார்த்திக் நரேனுக்கு இன்னொரு தயாரிப்பாளரான பத்ரி கஸ்தூரி தான் தன் பங்குக்கு கொஞ்சம் பணம் போட, மீதியை ‘துருவங்கள் 16’ படத்தில் சம்பாதித்த பணத்தைப் போட்டு ஒருவழியாக முழுப்படத்தையும் முடித்திருக்கிறார் கார்த்திக் நரேன்.

சரி படத்தை முடித்தாகி விட்டது இனி ரிலீசில் சிக்கல் இருக்காது என்று நினைத்த கார்த்திக் நரேனுக்கு காதுகளை எட்டியது அந்த பேரதிர்ச்சியான செய்தி!

‘நராகசுரன்’ படத்தை காட்டி காட்டியே பல இடங்களில் பணத்தை பைனான்ஸ் வாங்கியிருக்கிறார் கெளதம் மேனன். அப்படி வாங்கியவர் பணத்தை அந்தப் படத்தில் போடாமல் தன்னுடைய ‘துருவ நட்சத்திரம்’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் முதலீடு செய்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் அந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையையும் கார்த்திக் நரேனுக்குத் தெரியாமலேயே விற்று அந்தப் பணத்தையும் தன் சொந்தப் படங்களிலேயே முதலீடு செய்திருக்கிறார்.

இப்படி அடுத்தடுத்து கெளதம் மேனன் செய்த பெரிய மனுஷத்தன்மை இல்லாத செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் நொந்து போய் தனது மனக்குமுறலை ட்விட்டரில் கொட்டியிருக்கிறார் கார்த்திக் நரேன்.

நம்பி வந்தவங்களை நட்டாத்துல விடுற பழக்கம் எந்த மாதிரியான டிசைன் கெளதம்?