கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ‘காற்றின் மொழி’ படக்குழு!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நாலாபுறங்களிலும் இருந்து உதவிக்கரங்கள் நீள ஆரம்பித்திருக்கின்றன. திரைத்துறையில் ஜி.வி.பிரகாஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட நடிகர்களும் நிதி உதவியும், பொருளுதவியும் செய்து வருகின்றனர்.
இந்த உதவிக்கரங்களில் தங்கள் கரங்களையும் இணைத்துக் கொள்ள ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது ‘காற்றின் மொழி’ படக்குழு.
இதுகுறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறும்போது, ‘காற்றின் மொழி’ திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்பப்படமாக கொண்டாடி வரும் தமிழக மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
இந்த சமயத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ‘டெல்டா’ பகுதி மக்களுக்கு நீங்கள் ‘காற்றின் மொழி’ திரைப்படம் பார்ப்பதன் மூலமும் உதவலாம்.
இன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு ‘காற்றின் மொழி’ டிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரிலிருந்து ரூபாய் 2 தமிழக அரசின் ‘கஜா’ புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.
நம்மால் முடிந்த அளவு நாம் எல்லோரும் நிவாரண நிதி அளித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்.” இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.