மோடி விழாவை புறக்கணித்த கமல்-விஷால் : என்ன காரணம் தெரியுமா?

மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தினத்தந்தி நாளிதழின் பவள விழாவுக்கு திரையுலகில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கியமானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதே விழாவுக்கு கமல்ஹாசனுக்கும், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கும் முறையாக அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இந்த இருவருமே விழாவில் கலந்து கொள்ளவில்லை.
சில தினங்களுக்கு முன்பு இந்து தீவிரவாதம் இருக்கிறது என்று சொல்லி பெரும் சர்ச்சையில் சிக்கினார் கமல் ஹாசன். அவருடைய கருத்துக்கு கமலை சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் இந்து அமைப்பின் தலைவர் பகிரங்கமாக மிரட்டினார்.
இப்படிப்பட்ட சூழலில் மோடி கலந்து கொண்ட விழாவில் பங்கேற்பது சரியாக இருக்காது என்று முடிவெடுத்ததன் விளைவாகவே கமல் தினத்தந்தி பவள விழாவை புறக்கணித்ததாகச் சொல்கிறார்கள்.
அதேபோல நடிகர் விஷாலும் அண்மையில் விஜய்யின் மெர்சல் படப்பிரச்சனை தொடர்பாக பி.ஜே.பியின் தேசியச் செயலாளர் ஹெ.ராஜாவை கடுமையாக விமர்சித்திருந்தார். அந்தச் சூடு இன்னும் ஆறாத நிலையில் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றார்கள்.
ஆனால் விஷால் தரப்பில் அதற்காகவெல்லாம் விஷால் புறக்கணிக்கவில்லை. அன்றைய தினத்தில் ஹைதராபாத்தில் தெலுங்கு துப்பறிவாளன் படத்தின் புரமோஷனுக்காக சென்று விட்டார். அதனால் தான் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.